Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் ஆவதில்..சிக்கல் தொடர்கிறது ; போக்குவரத்துக்கழக  தகுதி சான்று பிரிவு மூடல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் ஆவதில்..சிக்கல் தொடர்கிறது ; போக்குவரத்துக்கழக  தகுதி சான்று பிரிவு மூடல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் ஆவதில்..சிக்கல் தொடர்கிறது ; போக்குவரத்துக்கழக  தகுதி சான்று பிரிவு மூடல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் ஆவதில்..சிக்கல் தொடர்கிறது ; போக்குவரத்துக்கழக  தகுதி சான்று பிரிவு மூடல்

ADDED : ஜூலை 14, 2024 04:16 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் செயல்பட்டு வந்த வாகன தகுதிச் சான்றுக்கான பராமரிப்பு பிரிவு மூடப்படுவதால் ராமநாதபுரம் போக்குவரத்து மண்டலம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தகுதி சான்றுக்கான பராமரிப்பு பிரிவு ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்தது. தற்போதுள்ள கிளைகளான ராமநாதபுரம் நகர், புறநகர், ராமேஸ்வரம், முதுகுளத்துார், பரமக்குடி, கமுதி என ஆறு கிளைகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலத்தில் உள்ளது. இந்த பஸ்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல், தகுதிச் சான்றுக்காக ஆண்டு தோறும் பஸ்களை தயார் செய்து அதனை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு சான்று வழங்கிய பின் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பராமரிப்பு அனைத்தும் தேவகோட்டை பணிமனைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் ஆறு கிளைகளில் உள்ள பஸ்கள் தகுதிச் சான்று, பராமரிப்புக்கும், பழுது நீக்கம் செய்வதற்கும் தேவையில்லாமல் 150 கி.மீ., மேல் அரசு பஸ்கள் தேவையின்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதற்கான எரி பொருள் செலவும் அதிகரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதிச் சான்று பராமரிப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த 50 தொழிலாளர்கள் தேவையின்றி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இங்கிருந்த கேன்டீன் மூடப்படுகிறது. இதுவரை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பயன்படுத்திய கேன்டீன் மூடப்படுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ராமநாதபுரம் மாவட்டமாக இருப்பதால் இங்கு கோட்ட மேலாளர் இருந்தார். தேவையற்ற நிர்வாக செலவு என கோட்ட மேலாளர் என்ற பதவியை ரத்து செய்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, சாயல்குடி பகுதியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்கப்பட இடம் தேர்வு செய்து விரைவில் பணிகள் தொடங்கவுள்ளனர்.

ராமநாதபுரத்தை விட குறைந்த அளவில் 5 கிளைகள் கொண்ட திருவள்ளூர், கரூர், நாகப்பட்டினம் போன்றவைகள் தனி மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் தகுதிச் சான்று பராமரிப்பு பிரிவு மூடப்படுவதால் ராமநாதபுரம் மண்டலமாக அறிவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த அரசு போக்குவரத்துக்கழக மண்டலம் வராமல் போவதற்கும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள தகுதி சான்று பிரிவை மூடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புவதற்குள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகுதிசான்று பிரிவை மூடும் முடிவை கைவிட வேண்டும்.

ராமநாதபுரத்தில் ஒரு அமைச்சர், எம்.எல்.ஏ., க்கள், எம்.பி., இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்து மூடப்படும் அரசு போக்குவரத்துக்கழக தகுதி சான்று பிரிவுக்கு குரல் கொடுக்காதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ----------------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us