Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தற்காலிக டிரைவரால் கவிழ்ந்த அரசு பஸ் * காயமின்றி தப்பிய பயணிகள்

தற்காலிக டிரைவரால் கவிழ்ந்த அரசு பஸ் * காயமின்றி தப்பிய பயணிகள்

தற்காலிக டிரைவரால் கவிழ்ந்த அரசு பஸ் * காயமின்றி தப்பிய பயணிகள்

தற்காலிக டிரைவரால் கவிழ்ந்த அரசு பஸ் * காயமின்றி தப்பிய பயணிகள்

ADDED : ஜூலை 26, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்:மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே நேற்று மதியம் தற்காலிக டிரைவரால் இயக்கப்பட்ட அரசு பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. பஸ்சில் பயணித்த 40 பயணிகள் காயமின்றி தப்பினர்.

மதுரையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 11:36 மணிக்கு ராமேஸ்வரம் பணிமனையைச் சேர்ந்த டி.என்., 63 என் 1809 எண் அரசு பஸ் மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு 42 பயணிகளுடன் புறப்பட்டது.

இப்பஸ்சை கீழக்கரையைச் சேர்ந்த தற்காலிக டிரைவர் சண்முகநாதன் 50, இயக்கினார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் 58, கண்டக்டராக இருந்தார். மதியம் 12:15 மணிக்கு திருப்பாச்சேத்தி இந்திராநகர் அருகே சென்ற போது டிரைவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சின் முன்புற, பின்புற கண்ணாடிகள் உடைந்தன.

அதன் வழியாக டிரைவர், கண்டக்டர், பயணிகள் வெளியேறினர். திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. பயணிகளை பரிசோதனை செய்த பின் அடுத்தடுத்து சென்ற அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்புவனம் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

பஸ் கவிழ்ந்த இடத்திலிருந்து 2 அடி துாரத்தில் மாரநாடு கண்மாய்க்கு செல்லும் கால்வாய் உள்ளது. பஸ் அதில் கவிழ்ந்திருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

ராமேஸ்வரம் கிளை பணிமனை மேலாளர் தனபால் கூறுகையில்,''அதிகாரிகளின் அனுமதி பெற்று தொலை துாரங்களுக்கும் தற்காலிக டிரைவர்களை நியமிக்கிறோம். பஸ்சில் குறைபாடு இல்லை. டிரைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் விபத்து ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.700 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. டவுன் பஸ்களில் போதிய வருவாய் கிடைக்காததால் தற்காலிக ஊழியர்களுக்கு கூடுதல் (படி காசு) வருவாய் கிடைக்காது. தொலை துார பஸ்களில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் பணிபுரிய ஆர்வம் காட்டி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்காமல் விபத்துகளில் சிக்குவதுடன் போதிய அனுபவம் இல்லாத தற்காலிக ஊழியர்களை நியமித்து பயணிகளின் உயிருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் விளையாடுகின்றனர் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us