/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அறிவிப்புடன் நின்ற அழகன்குளம் கடல் அகழாய்வு அறிவிப்புடன் நின்ற அழகன்குளம் கடல் அகழாய்வு
அறிவிப்புடன் நின்ற அழகன்குளம் கடல் அகழாய்வு
அறிவிப்புடன் நின்ற அழகன்குளம் கடல் அகழாய்வு
அறிவிப்புடன் நின்ற அழகன்குளம் கடல் அகழாய்வு
ADDED : ஜூலை 23, 2024 07:55 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அழகன்குளம் வைகை ஆறு முகத்துவாரம் கடற்கரை பகுதியில் கடல் அகழாய்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு செயல்வடிவம் பெறுவது எப்போது என தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அழகன்குளம் சங்க காலத்தில் மருங்கூர்பட்டினம் என அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் அகநானுாறு, நற்றினை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை நதிக்கரையோரத்து வாழ்க்கை முறைகளை வெளிக்கொணரும் விதம் இப்பகுதி துறைமுகமாக இருந்துள்ளது.
அழகன்குளம் பகுதியில் 1986--87 முதல் 2016--17 வரை எட்டு முறை தமிழக அரசால் அகழாய்வுப்பணிகள் நடந்துள்ளன. இதில் பெருங்கற்கால பானை ஓடுகள் கிடைத்தன. இதன் மூலம் கி.மு.,400 முதல் கி.பி., 500 காலக்கட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இங்கு கிடைத்த பொருட்களை கார்பன் சி 14 என்ற முறையில் பகுப்பாய்வு ஆய்வு செய்ததில் 2360 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த பகுதியாக அறியப்பட்டது.
ரோமானிய நாட்டு மதுக்குடுவைகள், மீன், புறா, மயில் உருவங்களுடன் கூடிய பானை ஓடுகள், மவுரியர்கள் காலத்தில் பயன்படுத்திய பானை ஓடுகள் என பல ஆயிரம் பொருட்கள் கண்டறியப்பட்டன.
பாண்டியர் கால காசுகள், ஈழக்காசு, எகிப்து நாட்டினருடன் உள்ள தொடர்புகள், சீன மண்பாண்டங்கள் என அனைத்து பொருட்களும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சிறப்பு வாய்ந்தது என தொல்லியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அழகன்குளம் பகுதியில் துறைமுகம் இருந்ததால் கடல் அகழாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு 2021 ல் அறிவித்தது. அறிவிப்பு வந்தவுடன் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். கடல் அகழாய்வில் மத்திய அரசின் தேசிய கடல்சார் நிலையம், தேசிய கடல் தொழில் நுட்பவியல் நிறுவனம் இணைந்து இந்த அகழாய்வில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அறிவிப்புடன் சரி, இன்று வரை எந்த பணியும் துவக்கப்படவில்லை.
கடல் அகழாய்வு நடத்தினால் பண்டைய கால மக்களின் வாழ்வு முறைகள் குறித்த எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து கடலில் அகழாய்வு பணியை துவங்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அறிவித்தால் மட்டும் போதுமா
வழக்கறிஞர் அசோகன், முன்னாள் ஊராட்சித்தலைவர், அழகன்குளம்: இங்கு 8 முறை அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. இங்கு அற்புதமான 13,500 பழங்கால பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பது அறிவிப்புடன் நிற்கிறது. கடல் அகழாய்வுப்பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்றார்.