Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்தில் அகற்றப்படும் களை செடிகள்; தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தயாரிப்பு

வனத்தில் அகற்றப்படும் களை செடிகள்; தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தயாரிப்பு

வனத்தில் அகற்றப்படும் களை செடிகள்; தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தயாரிப்பு

வனத்தில் அகற்றப்படும் களை செடிகள்; தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தயாரிப்பு

ADDED : ஜூன் 12, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
கூடலுார்; மசினகுடியில் வனத்துறையினர் அமைத்துள்ள தொழிற்சாலையில், களைச்செடிகளை பயன்படுத்தி 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருள் தயாரிக்கும் பணி வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், உத்தரவுப்படி நீலகிரி மாவட்ட வனங்களில் காணப்படும், உண்ணி உள்ளிட்ட களைச் செடிகளை அகற்றும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை ஏற்கனவே ஐகோர்ட் நீதிபதிகள் சதீஸ்குமார், பரத் சக்கரவர்த்தி ஏற்கனவே ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், வனங்களிலிருந்து அகற்றப்படும் உண்ணி செடிகள் உட்பட பிற களைச் செடிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருவாய் ஈட்டும் நடவடிக்கையில், முதுமலை மசினகுடி வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அகற்றப்படும் களைச் செடிகளை சேகரித்து, சிறிய துகல்களாக மாற்றி உலர்த்தி இயந்திரத்தின் உதவியுடன், 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருளை தயாரிக்கும் பணி மசினகுடியில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தற்போது முழுமையாக வெற்றி பெற்றுள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவுபடி, வனப்பகுதிகளை பாதிக்கும் களை செடிகளை தொடர்ச்சியாக அகற்றி வருகிறோம். இதனை ஆங்காங்கே குவித்து வைப்பதால், கோடை காலத்தில் வனத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க, களை செடிகளால், 'பிரிக்வெட்ஸ்' எரிபொருள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை துவங்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றதால், இவற்றை அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான பயிற்சி சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

'பிரிக்வெட்ஸ்' உருவாக்குவது எப்படி?

நீலகிரி வனப்பகுதியில், களைச் செடிகளை அகற்றும் இடத்தில், வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திரத்தை பயன்படுத்தி, அதனை சிறிய துண்டுகளாக மாற்றி, தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். தொழிற்சாலையில் அதனை காயவைத்து, ஐந்து சதவீதம் ஈரப்பதத்துடன், மீண்டும் ஒரு இயந்திரத்தில் பயன்படுத்தி சிறிய துகள்களாக மாற்றி, மற்றொரு இயந்திரத்துக்கு மாற்றுகின்றனர். தொடர்ந்து, இயந்திரத்தில் உள்ள குழாயில் அதிக அழுத்தம் கொடுத்து, 'குழாய் புட்டு' போன்ற வடிவில், 'பிரிக்வெட்ஸ்' எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இங்கு தயாரிக்கப்படும் 'பிரிக்வெட்ஸ்' எரிபொருள், பழுப்பு நிலக்கரி போன்று நின்று எரியும் தன்மை உடையது. ஒரு கிலோவுக்கு, 4000 முதல் 5000 கலோரி கிடைக்கும். தேயிலை தொழிற்சாலையில் துாள் உற்பத்தி செய்ய, 1000 கிலோ விறகிற்கு மாற்றாக, 'பிரிக்வேட்ஸ்' 200 கிலோ பயன்படுத்தினால் போதும். இதனை அதிகளவில் உற்பத்தி செய்யும் பட்சத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us