Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இயற்கை விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு! அறிக்கை தயாரித்து விரைவில் செயல்படுத்த திட்டம்

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு! அறிக்கை தயாரித்து விரைவில் செயல்படுத்த திட்டம்

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு! அறிக்கை தயாரித்து விரைவில் செயல்படுத்த திட்டம்

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு! அறிக்கை தயாரித்து விரைவில் செயல்படுத்த திட்டம்

ADDED : ஜன 11, 2024 09:47 PM


Google News
Latest Tamil News
ஊட்டி:நீலகிரியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, மாநில தோட்டக்கலை துறை, 2.5 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது.

நீலகிரியில், நிலவும் தட்ப வெப்பநிலை, மலை காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலை தோட்ட பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. ஆனால், ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு சுற்று சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

நீலகிரியின் இயற்கை வளம், சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில், 2018ம் ஆண்டு இயற்கை விவசாயம் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகத்துடன், தோட்டக்கலை, கூட்டுறவு துறை உள்ளிட்ட சில துறை ஒருங்கிணைப்புடன் இயற்கை விவசாயத்திற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது.

ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு


இதன் பின், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் எடுக்கப்பட்ட முயற்சியால், 5 ஆயிரம் ஏக்கரில் இயற்கை விவசாயமும், 6 ஆயிரம் ஏக்கரில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்த மாறுதலுக்கான 'ஸ்கோப்' சான்றிதழ் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறைவழங்கியது.

மேலும், நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்றுவதோடு அதன் மூலம் விவசாயிகள் நல்லதரமான பொருட்களை உற்பத்தி செய்து, சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்கும், வாழ்வாதாரம் மேம்படவும், வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சுற்றுசூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வழி வகுக்கும் வகையில், மாநில தோட்டக்கலை துறை இயற்கை விவசாயிகள் நலனுக்காக, 2.5 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. 'இந்த நிதியை இயற்கை விவசாயிகள் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''நீலகிரியில், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன் கருதி, மாநில தோட்டக்கலை துறை, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

இந்த நிதி மூலம் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில், மாதிரி திடல் அமைப்பது, விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் மானியத்தில் வழங்குவது, விவசாயிகளுக்கு தேவையான களப்பயிற்சி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியும். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து கலெக்டர் ஒப்புதலுக்கு அனுப்பிய பின், விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us