Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோவை மாநகராட்சியுடன் இணைக்க கிராம ஊராட்சிகள் ஆட்சேபனை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முடிவு

கோவை மாநகராட்சியுடன் இணைக்க கிராம ஊராட்சிகள் ஆட்சேபனை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முடிவு

கோவை மாநகராட்சியுடன் இணைக்க கிராம ஊராட்சிகள் ஆட்சேபனை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முடிவு

கோவை மாநகராட்சியுடன் இணைக்க கிராம ஊராட்சிகள் ஆட்சேபனை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முடிவு

ADDED : ஜூலை 05, 2024 01:58 AM


Google News
கோவில்பாளையம்:கோவை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, சில கிராம ஊராட்சி நிர்வாகிகள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 1981ல் கோவை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011ல் மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், ஒரு கிராம ஊராட்சியை இணைத்து, 100 வார்டுகள் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக அரசு, மீண்டும் கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய கருத்துரு கேட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி எல்லையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்படும் என்று பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், வெள்ளானைப்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் எந்த வளர்ச்சி பணியும் பெரிதாக நடக்கவில்லை. பேரூராட்சியாக இருந்தபோது செலுத்திய சொத்து வரியை விட இரண்டு மடங்கு கூடுதலாக வரி செலுத்துகின்றனர்.மேலும் உள்ளூரில் இருந்த அலுவலகங்களுக்கு பதில் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அதிக தொலைவு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் தற்போது 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எங்கு வேலை கிடைக்காவிட்டாலும், அரசு குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தருகிறது. தினசரி சம்பளமாக 319 ரூபாய் வழங்கப்படுகிறது.

வேலை தர முடியாவிட்டாலும் அதற்குரிய இழப்பீடு தொகை பெற வழியுள்ளது. கிராம ஊராட்சிகளில் தான் தொகுப்பு வீடு, இலவச வீட்டு மனைபட்டா, உறிஞ்சு குழி, தனி நபர் கழிப்பறை கிடைப்பது எளிதாக உள்ளது. அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம ஊராட்சிகளில் வழங்கப்படுகிறது. மாநகராட்சியுடன் இணைந்தால், 100 நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தற்போது வேலை அட்டை உள்ள 1500க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். வறுமையில் தள்ளப்படும் நிலை ஏற்படும்.அரசு, கோவை மாநகராட்சியுடன் எஸ்.எஸ்.குளத்தில் உள்ள ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் இருந்தால் கைவிட வேண்டும். அதற்கு எதிராக, கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு தர உள்ளோம்.

இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us