/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி ரேஸ்கோர்ஸ்சுக்கு 'சீல்' ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி ரேஸ்கோர்ஸ்சுக்கு 'சீல்'
ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி ரேஸ்கோர்ஸ்சுக்கு 'சீல்'
ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி ரேஸ்கோர்ஸ்சுக்கு 'சீல்'
ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி ரேஸ்கோர்ஸ்சுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 05, 2024 09:45 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில், வருவாய் துறையினருக்குச் சொந்தமான, 52 ஏக்கர் நிலத்தில், 120 ஆண்டு காலமாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயம், உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வந்தது. ஊட்டி கோடை சீசனின் போது முதல் நிகழ்ச்சியாக, ஏப்., 14ல் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை, 1978ம் ஆண்டு முதல் செலுத்தாமல் இருந்தது. இதுவரை, 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட், 2001ம் ஆண்டுக்கு பின், குத்தகை தொகை செலுத்த அறிவுறுத்தியது.
இருப்பினும் குத்தகை தொகையை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை. தொடர்ந்து, ஜூன், 21ம் தேதி, மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் 'நோட்டீஸ்' அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவின்படி, நேற்று காலை ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ் தலைமையில், தாசில்தார் சரவணக்குமார் மற்றும் போலீசார் உதவியுடன், வருவாய் துறையினர், நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலகக் கட்டடங்கள் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டன.
மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மீட்கப்பட்ட நிலம், மாவட்ட தோட்டக்கலை துறைக்கு, 'சுழல் பூங்கா' அமைக்க ஒதுக்கப்பட்டது. தோட்டக்கலை துறையினர் பூர்வாங்க பணியை துவக்கினர்.