ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொது கழிப்பறை இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். தற்போது, பயணிகள் வசதிக்காக பொது கழிப்பறை கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை, நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் ஆய்வு செய்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழே உள்ள இடத்தில் பொது கழிப்பறை அமைக்க இடம் தேர்வு செய்தனர். தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி வந்தவுடன் கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது. நகராட்சி மேற்பார்வையாளர் சந்தோஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.