Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல், மோகனுாரில் கொட்டித்தீர்த்த கனமழை

நாமக்கல், மோகனுாரில் கொட்டித்தீர்த்த கனமழை

நாமக்கல், மோகனுாரில் கொட்டித்தீர்த்த கனமழை

நாமக்கல், மோகனுாரில் கொட்டித்தீர்த்த கனமழை

ADDED : செப் 02, 2025 01:39 AM


Google News
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில், லேசான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து, மழைவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. லேசாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. அதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களும், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமக்கல் பரமத்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல், மோகனுார் பகுதியில், மாலை, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கி, ஒரு மணி நேரம் நீடித்தது. மோகனுார், மணப்பள்ளி, ஆமப்பாறை, வாழவந்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.

* பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, முக்கால் மணி நேரம் வெளுத்து கட்டியது. இந்த கன மழையால், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பிரிவு சாலை பகுதியில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வடிகால் அடைப்பால், மழைநீர் சாலையில் பாய்ந்தோடியது. காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றினர்.

* சேந்தமங்கலம், நைனா மலை, மின்னாம்பள்ளி, புதன் சந்தை, முத்துக்காபட்டி, காளப்பநாயக்கன்பட்டி பகுதியில், நேற்று மாலை, 4:00 மணி முதல் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாது கன மழை கொட்டியது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

* குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தெற்கு காலனி, குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், மாலை, 3:00 மணியிலிருந்து, இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. சாலையோர வியாபாரிகள் கடை வைக்க தயாரான போது மழை பெய்ததால், கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us