/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு
ADDED : ஜூலை 26, 2024 02:05 AM
நாமக்கல்:''நாமக்கல் மண்டலத்தில், முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளது,'' என, கோழிப்பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
நாமக்கல்லில், நேற்று கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், சிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்காச்சோளம் கிலோ, 18 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்து, மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த முட்டை கோழிகளை, நேரடியாக கோழிப்பண்ணையாளர் சங்கம் வாயிலாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு பண்ணையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும், விலையில் இருந்து குறைத்து பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம். ஒவ்வொரு பண்ணையும் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். கோழித் தீவனங்களான சோயா, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவற்றுக்கு மத்திய அரசு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கிறது.
நாடு முழுவதும் கோழி தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். ஜி.எஸ்.டி., விலக்கு, மானிய விலையில் தீவனம் போன்றவற்றை வழங்கினால் பண்ணையாளர்கள் பயனடைவர். நாமக்கல் மண்டலத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது. இலங்கைக்கு செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓமன், மஸ்கட் நாடுகளுக்கு, 15 சதவீத முட்டைகள் மட்டுமே செல்கிறது.
எத்தனால் தயாரிப்புக்கு மக்காச்சோளம் அதிகம் பயன்படுத்தப்படுவதால், கால்நடைகளுக்கும், கோழித் தீவனங்களுக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டை விலை, 6 ரூபாய்க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்திலும் முட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். தற்போது சத்துணவுக்காக, 55 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது. காலை உணவு திட்டத்திலும் முட்டை சேர்க்கப்பட்டால், 60 லட்சத்திற்கும் மேலாக அனுப்ப வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினார்.