Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குட்லாடம்பட்டியில் மீண்டும் மலையேற்றம் துவக்கம்

குட்லாடம்பட்டியில் மீண்டும் மலையேற்றம் துவக்கம்

குட்லாடம்பட்டியில் மீண்டும் மலையேற்றம் துவக்கம்

குட்லாடம்பட்டியில் மீண்டும் மலையேற்றம் துவக்கம்

ADDED : ஜூன் 20, 2025 03:27 AM


Google News
மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவியின் தடாகை பாதையில் மீண்டும் மலையேற்றம் துவங்கியுள்ளது.

வாடிப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் குட்லாடம்பட்டி அருவி உள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்க இங்குள்ள தடாகை மலைப் பாதையில் மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நான்கு கி.மீ., மலையேற்றம் சென்றுவர 2 மணி நேரம் ஆகும்.

இலையுதிர் காடுகளின் அழகு, தெளிந்த நீரோடைகள், அரிய வகை பறவைகள், பூச்சி இனங்கள், காட்டெருது, காட்டு நாய்கள், தேவாங்கு, லங்கூர் குரங்குகள் என 'டிரக்கிங்' செய்வோர் வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

மலையேறுபவர்கள், சிறிய முதுகுப்பை, மலையேற்றத்திற்கு ஏதுவான காலணிகள், பிளாஸ்டிக் அல்லாத தண்ணீர் பாட்டில்கள், வியர்வை உறிஞ்சும் ஆடைகள், எடை குறைந்த ஜாக்கெட்டுகள், கொட்டை வகைகள், உலர்பழங்கள் நிறைந்த உணவுகள், அவசர கால மருந்துகள், சன் ஸ்கிரீன், பூச்சி விரட்டிகள், சானிடைசர்கள், ரெயின் கோட்கள், புற ஊதாக் கதிர்களை தடுக்கும் சன் கிளாசுகள் கொண்டு வரலாம்.

ஆறு வயதிற்கு மேற்பட்டோர் மலையேற்றம் புரியலாம். விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு வன அனுபவக் கழகம், தமிழக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட www.trektamilnadu.com எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஆறு முதல் 17 வயதிற்குட்பட்டோருக்கு ரூ.529, பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.699 கட்டணம். ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் உண்டு. மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி, கைடு சேவை, வழிகாட்டி புத்தகம், இன்சூரன்ஸ், சிற்றுண்டி ஆகியவை கட்டணத்தில் அடங்கும்.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் காலை 8:00 மணி, 10:00 மணிக்கு வனத்துறை அலுவலர்களின் உதவியோடு மலையேற்றம் நடைபெறும். கோடையில் அருவியில் தண்ணீர் வரத்து குறைவால் மலையேற்றம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் துவங்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us