Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சத்துணவு ஊழியர்களை கண்டுகொள்ள ஆளில்லை

சத்துணவு ஊழியர்களை கண்டுகொள்ள ஆளில்லை

சத்துணவு ஊழியர்களை கண்டுகொள்ள ஆளில்லை

சத்துணவு ஊழியர்களை கண்டுகொள்ள ஆளில்லை

ADDED : செப் 22, 2025 03:15 AM


Google News
மதுரை : தொகுப்பூதியம் பெற்றுக் கொண்டு பல்வேறு துறைகளின் பணிகளையும் செய்து வரும் சத்துணவு ஊழியர்கள் நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் முதல் டிசம்பர் வரை போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 44 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறுகின்றனர். பணிநிரந்தரம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இத்துறையில் 1.5 லட்சம் ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 80 ஆயிரம் பேர் தான் உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் என மூவர் பணியில் இருப்பர்.

ஆனால்தற்போதைய நிலையில் பல இடங்களில் இருவர் மட்டுமே உள்ளனர். ஊழியர் பற்றாக்குறையால் ஒருவரே 3, 4 மையங்களை கவனிக்கின்றனர். ஒரு இடத்தில் சமைத்து 3, 4 மையங்களுக்கு அனுப்பும் நிலையும் உள்ளது.

சமூகநலம், மகளிர் உரிமைத்துறையில் பணியாற்றும் இவர்களின் பணிகள், ஊரக வளர்ச்சித்துறையினர் கட்டிப்பாட்டில் உள்ளது. கல்வித்துறையிலும் அவ்வப்போது சென்சஸ் கணக்கெடுப்பு போன்ற பணிகளுக்கு இவர்களை பயன்படுத்துகின்றனர்.

இதேபோல தேர்தலில் வாக்காளர் பட்டியல், ஓட்டுசிலீப் வழங்குவது, பூல்லெவல் பணிகள் என வருவாய்த்துறையினரும், மருத்துவத்துறையினர் குழந்தைகளுக்கு தடுப்பூசி இடுவது, கணக்கெடுப்பு போன்ற பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

இப்படி பிறதுறையினர் பயன்படுத்தினாலும் இன்னும் நிரந்தர பணியாளராக அறிவிக்கவில்லை. மற்ற துறைகளைப் போல பதவி உயர்வும் இல்லை. சிலருக்கு கிராம சேவிகா என ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பு கண்துடைப்பாக பதவி வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறியதாவது:

பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. புதிய நியமனங்களாக தொகுப்பூதியத்தில் ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் உதவியாளர்களை தேர்வு செய்து 6 மாதமாக நிலுவையில் உள்ளது. அவர்களையும் நியமனம் செய்யவில்லை. இதனால் பணிப்பளு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் திருச்சியில் கூடி சில போராட்டங்களை அறிவித்துள்ளோம்.

அக்.8ல் ஒருநாள் அமைப்பாளர்கள் மட்டும் தற்செயல் விடுப்பு எடுப்பது, நவ.7 ல் மாவட்ட அளவில்பெருந்திரள் முறையீடு, டிச.17 ல் சென்னையில் மாநில நிர்வாகிகள் துறை அதிகாரிகளை சந்திப்பது, 2026, ஜன. 6, 7, 8 ல் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, இதில்தீர்வில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்திற்கு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us