Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நிறுவஎதனடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது உயர்நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நிறுவஎதனடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது உயர்நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நிறுவஎதனடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது உயர்நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நிறுவஎதனடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது உயர்நீதிமன்றம் கேள்வி

ADDED : ஜன 08, 2025 05:13 AM


Google News
மதுரை : எதனடிப்படையில் அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் நிறுவ அனுமதிக்கப்படுகிறது. அதற்கு விதிகள் உள்ளதா என தெளிவுபடுத்தி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை கதிரவன் தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க. ,மதுரை மேற்கு 3ம் பகுதி மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் சில அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. அ.தி.மு.க.,வின் 53 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடிக் கம்பம் நட அனுமதி கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளித்தோம்.

உதவி கோட்டப் பொறியாளர்,'விபத்து, பாதுகாப்பு காரணம் கருதி அனுமதி வழங்குவதில்லை. போலீசார், வருவாய்த்துறையிடம் அனுமதி பெறலாம்,' என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

மதுரை சித்தன் தாக்கல் செய்த மனு:மதுரை மேற்கு 6 ம் பகுதி அ.தி.மு.க.,செயலாளராக உள்ளேன். மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு காமாட்சி நகரில் எம்.ஜி.ஆர்.,மன்றம் வாசலில் ஏற்கனவே அ.தி.மு.க.,கொடிக் கம்பம் உள்ளது. அருகில் மின்சார ஒயர் செல்வதால் மாற்றி எனது உறவினர் இடம் அருகில் நிறுவ அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன்; நிலுவையில் உள்ளது.

விசாரித்த போது பட்டா நிலத்தில் மட்டுமே கொடிக் கம்பம் நிறுவ அனுமதி வழங்க வழிவகை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே பகுதி புறம்போக்கு நிலத்தில் தி.மு.க., மற்றும் இதர கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை இல்லை. காமாட்சி நகர் எம்.ஜி.ஆர்.,மன்றம் அருகே கட்சி கொடிக் கம்பத்தை புதிதாக நிறுவ அனுமதிக்க மாநகராட்சி கமிஷனர், டி.ஆர்.ஓ., விற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: பொது இடங்களில் அரசியல் கட்சிகளால் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களால் இதுவரை விரும்பத்தாகத அசம்பாவிதம் எதுவும் நடந்துள்ளதா, வழக்கு பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து டி.ஜி.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று விசாரித்தார்.டி.ஜி.பி.,தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி தெரிவித்ததாவது:

அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நிறுவியது தொடர்பாக 77 வழக்குகள், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக 37, மொத்தம் 114 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கொடிக் கம்பங்கள் நிறுவ வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியளிக்கின்றன. தடையில்லாச் சான்று மட்டுமே காவல்துறை வழங்குகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை எனில் போலீசார் தலையிடுகின்றனர்.நீதிபதி: பஸ் ஸ்டாப், முக்கிய சந்திப்புகளில் அரசியல் கட்சிகள், சங்கங்களின் கொடிக் கம்பங்கள் உள்ளன. இக்கணினி யுகத்திலும் இந்நிலை நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. பொது இடத்தில் கம்பங்கள் நிறுவும் அமைப்புகளிடம் ஏன் வாடகை வசூலிக்கக்கூடாது. பட்டா நிலத்தில் கம்பங்களை நிறுவலாமே. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: எதனடிப்படையில் கொடிக் கம்பங்கள் நிறுவ அனுமதிக்கப்படுகிறது. அதற்கு விதிகள் எதுவும் உள்ளதா. அனுமதியளிப்பதற்குரிய சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்பதை தெளிவுபடுத்தி தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us