/உள்ளூர் செய்திகள்/மதுரை/அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசே நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசே நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசே நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசே நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசே நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 13, 2024 04:56 AM
மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கலெக்டர் அமைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழுவே நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை முனியசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லுாரில் பல்வேறு சமூக பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அவனியாபுரத்தில் சிலரின் துாண்டுதலால் கலெக்டர், வருவாய்த்துறையினர் ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலுார் ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு சமூக மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவியது. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆலோசனைக் குழு அமைக்க வாய்ப்பில்லை என ஆர்.டி.ஓ., அறிக்கை சமர்ப்பித்தார். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஒருங்கிணைப்புக் குழுவை கலெக்டர் ஜன.8ல் அமைத்துள்ளார். அந்த உத்தரவை உறுதி செய்கிறோம்.
ஆலோசனைக் குழுவை கலெக்டர் அமைக்க வேண்டும். அதில் மனுதாரர்கள் கல்யாணசுந்தரம், முனியசாமியை சேர்க்க வேண்டும். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் மக்களிடமிருந்து நன்கொடை பெற உரிமை இல்லை.
விதிமீறல் தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது சட்டப்படி ஒருங்கிணைப்புக்குழு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும்வரை அல்லது மதுரை கீழமை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில் வழக்கில் தீர்வு ஏற்படும்வரை இந்த ஏற்பாடு தொடரும்.
மதுரை தெற்கு துணைத் தாசில்தார் ஜெயகாந்தனிடம் அன்பரசன் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக அரசு தரப்பு இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தது. துணைத் தாசில்தாரின் புகாரை உயர்நீதிமன்றக் கிளை போலீசார் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.