ADDED : ஜன 02, 2024 11:33 PM
மதுரை:உற்பத்தி, சேவைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை இழுத்தடிக்கும் பிற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத்தரும் எம்.எஸ்.எம்.இ. வசதியாக்கல் குழு மூலம் கடந்தாண்டில் 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பொருள் அல்லது சேவையைப் பெற்று அதற்கான தொகையை செலுத்தாமல் பிற நிறுவனங்கள் இழுத்தடிக்கும் போது குறு, சிறு நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்தமுடியாமல் சிரமப்படும்.
அத்தகைய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, சென்னையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ. வசதியாக்கல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தொழில் மையத்தில் 10 தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறுதொழில் நிறுவனங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலுவைத்தொகை வசூலித்து தரப்படுவதாக மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:
குறு, சிறு நிறுவனங்களிடம் பொருள் அல்லது சேவை பெறுபவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் தரவேண்டும். தாமதமானால் புகார் செய்யலாம். கடந்தாண்டில் 120 பேர் தங்களது பிரச்னைகளை குழுவின் முன் வைத்தனர்.
இருதரப்பினரையும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காணப்பட்டதில் 69 குறு, சிறு நிறுவனங்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.6.07கோடி வசூலானது. இதில் ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி அசல் தொகையுடன் 3 மடங்கு வட்டி கூடுதலாக வசூலித்து வழங்கப்படும்.
குறு, சிறு நிறுவனங்கள் தென்மாவட்டங்களுக்குள் இருக்க வேண்டும். பொருள் அல்லது சேவை பெற்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குள் எங்கு இருந்தாலும் ஆன்லைன் மூலம் புகார் செய்து வரவழைக்கலாம். புகார்களை www.samadhaan.msme.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பதிவு மூப்பு அடிப்படையில் புகார்கள் எடுத்து விசாரிக்கப்படும். இதற்கு அரசு கட்டணம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.