ADDED : ஜூன் 11, 2024 06:40 AM
பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை: ஒத்தக்கடை ராஜிவ்காந்தி நகர் மாரிமுத்து 27. நேற்றுமுன்தினம் இரவு கடை முன் மர்மநபர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். உயிர்சேதமில்லை. முன்விரோதம் காரணமாக வீசப்பட்டதா என மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேடப்படும் குற்றவாளி
மதுரை: தேனி அல்லிநகரம் வெங்கடேசன். இவரை 2006ல் சுப்பிரமணியபுரம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு மதுரை ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜர் ஆகாததால் 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் பறிமுதல்
திருமங்கலம்: கப்பலுார் ரிங் ரோட்டில் கருவேலம்பட்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு ஆஸ்டின்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினி வேனை சோதனையிட்டபோது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பிளாஸ்டிக் கேன்களில் 90 லிட்டர் பெட்ரோல், 40 லிட்டர் டீசலை கொண்டு வந்தது தெரிந்தது. டிரைவர் கள்ளிக்குடி தாலுகா உலகாணி முருகனிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை கைது செய்தனர்.
மாணவர் தற்கொலை
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே வலங்காங்குளம் கூலித்தொழிலாளி அய்யர் மகன் நித்திஷ் 13. கருமாத்துார் பகுதி பள்ளியில் 7 ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி திறந்த நிலையில் செல்ல மறுத்து மாட்டுக்கொட்டகையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் - வேன் மோதல்
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே பிரவியம்பட்டியைச் சேர்ந்தவர்கள், திருமங்கலம் அருகே உரப்பனுாரில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு பயணியர் வேனில் சென்று திரும்பினர். நேற்று மதியம் 2:50 மணியளவில் செல்லம்பட்டி அருகே மதுரை ரோட்டில் வேன் திரும்பியபோது, தேனியில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் மோதியதில் வேனில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.