கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்
கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்
கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்
ADDED : ஜூலை 29, 2024 06:49 AM
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் இருந்து ஏலத்தோட்டங்களில் உரமாக பயன்படுத்த ஆட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வதால், ஆடு வளர்ப்போர் கூடுதல் வருமானம் பார்க்கின்றனர்.
இப்பகுதியில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளை இரவில் கொட்டடியில் அடைகின்றனர். சிலர் விவசாய நிலங்களில் கிடை அமர்த்துகின்றனர்.
இப்படி ஆடு வளர்ப்போர், ஆட்டுச் சாணத்தை சேகரித்து உரத்திற்காக பிளாஸ்டிக், சணல் பைகளில் கட்டி கேரளாவுக்கு அனுப்புகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆட்டுச் சாணம் மூலம் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. உள்ளூர் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கிடை அமைத்து ஆடுகளை சில வாரம் தங்க வைக்கின்றனர். இதனால் ஆட்டுச் சாணம் நிலத்தில் நேரடியாக கலந்து விடுகிறது.
ஆட்டுச் சாணம், சிறுநீரில் மண்ணின் வளத்திற்கு தேவையான இயற்கை சத்துகள் அதிகம் உள்ளது. இதனை உரமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு பாதிப்பு வராது.
அதேசமயம் மாட்டுச் சாணம் போல, ஆட்டுச் சாணத்தை இங்குள்ள விவசாயிகள் விலைக்கு வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கேரளாவுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது என்றனர்.