/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கப்பலுார் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் கப்பலுார் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
கப்பலுார் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
கப்பலுார் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
கப்பலுார் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 09, 2024 05:29 AM
திருமங்கலம்: கப்பலுார் டோல்கேட்டில் நாளை(ஜூலை 10) முதல் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கப்பலுாரில் 2010ல் டோல்கேட் அமைக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற 3 மாதத்திற்குள் டோல்கேட் அகற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்த நிலையில் இதுவரை அகற்றவில்லை.
கட்டணம் செலுத்த டோல்கேட் நிர்வாகம் கட்டாயப்படுத்தும்போது வாகன ஓட்டிகள் போராடுவதும், தற்காலிகமாக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கை.
இந்நிலையில் கட்டணமின்றி டோல்கேட்டை கடந்து சென்றதாக திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை செலுத்தகோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
டோல்கேட்டில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் உள்ள வாகனங்கள் ரூ. 325 மாதாந்திர கட்டணம் செலுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் என டோல்கேட் நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகள் ஜூலை 10 முதல் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அதே சமயம் கட்டண வசூல் குறித்து டோல்கேட் நிர்வாகம் தரப்பில் முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.