ADDED : ஜூலை 07, 2024 02:24 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டவர் பிளாக்' கட்டடத்தில் இதய பிரிவு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உட்கார இடமின்றி வெயிலில் நீண்ட வரிசையில் வேதனைப்படுகின்றனர்.
ஆறு மாதம் முன்பு ரூ.323 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட பல்வேறு மருத்துவ பிரிவுகளுக்கான கட்டடத்தை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். 3 மாதங்கள் வரை பயன்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது பெரும்பாலான பிரிவுகள் செயல்பட துவங்கியுள்ளன.
கீழ்த்தளத்தில் இதய மருத்துவப் பிரிவும், இதய அறுவை சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.டீன் அலுவலகத்தை ஒட்டியுள்ள இதய மருத்துவப் பிரிவு முன்புற வரவேற்பறையில் குறைந்தளவே இருக்கைகள் உள்ளன. நோயாளிகள் காலை 8:00 மணி முதலே நீண்ட வரிசைக்கு வந்து விடுவதால் உட்கார இடமின்றி வெயிலில் நிற்கின்றனர்.
அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புற திண்டில் வெளியே காத்திருக்க வைக்கப்படுகின்றனர். இதய அறுவை சிகிச்சை பிரிவு பகுதியில் போதுமான இடவசதி இருந்தாலும் வரிசையில் இருந்து விலகி நோயாளிகள் அங்கு சென்று காத்திருக்க முடியாது. கோடிக்கணக்கில் செலவழித்தும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை.
ஏற்கனவே பலவீனமாக உள்ள இதய நோயாளிகள் வெயிலில் மயங்கி விழுந்து விபரீதம் ஏற்படும் முன்பாக மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.