ADDED : ஜூன் 30, 2024 04:47 AM

தரமான தார் ரோடு தேவை
மேலுார் அருகே உலகநாதபுரம் காலனியில் 22 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தரமான ரோடு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மூக்குசாமி, உலகநாதபுரம்.
ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்
வாடிப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் ஆண்டிப்பட்டி பங்களா பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் 500 மீட்டர் தள்ளி நிறுத்தப்படுவதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களால் ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெயரூபன், தென்கரை.
பஸ் ஸ்டாப்களில் குடிமகன்கள்
ஒத்தக்கடை பஸ் ஸ்டாப்பில் இரவில் குடித்துவிட்டு குடிமகன்கள் அங்கேயே போதையில் படுத்து விடுகின்றனர். காலையில் காலி பாட்டில்கள், குடிமகன்களின் அவலட்சணங்களை பார்த்து பள்ளிக் குழந்தைகளை பஸ் ஏற்றிவிட வரும் பெற்றோர் முகம் சுழிக்கின்றனர். அருகில் இருக்கும் டாஸ்மாக்கை அகற்றவும், பஸ் ஸ்டாப்களை பாராக மாற்றுவதையும் அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
- முரளி சுப்பிரமணியன், ஒத்தக்கடை
வீணாகும் குடிநீர்
மதுரை ஞானஒளிவுபுரம் கனரா வங்கி எதிரே குடிநீர் பல நாட்களாக ரோட்டில் வீணாகி வருகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நகரின் பல இடங்களில் குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் இப்படி ரோட்டில் வீணாவதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம். மாநகராட்சி விரைந்து சரி செய்ய வேண்டும்.
- லட்சுமண் காந்தி, ஞானஒளிவுபுரம்.
ரோடு ஆக்கிரமிப்பு
மதுரை வார்டு 47 தெற்கு மாரட் வீதி மருத்துவமனை உள்ள நடைபாதையில் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கும் நடந்து செல்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது. போக்குவரத்து போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அசோக், தெற்குவாசல்.
கழிவுநீர் தேக்கம்
மதுரை தத்தனேரி பெரியசாமி கோனார் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் ஆறாக செல்கிறது. இதனால் மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பார்த்திபன், தத்தனேரி.
குண்டும் குழியுமான ரோடுகள்
மதுரை தமுக்கம் யூனியன் கிளப் பின்புறம் கமலா நகரில் ரோடுகளில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாகியும் முறையாக ரோடு அமைக்கப்படவில்லை. ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மக்கள் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தரமான ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோகர், தல்லாகுளம்.
தெருநாய் தொல்லை
மதுரை அய்யர்பங்களாவில் உள்ள அய்யப்பன் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சென்ற வாரம் என் தங்கையை தெருநாய் கடித்து விட்டது. இப்பகுதியில் குழந்தைகள் அதிகம்பேர் விளையாடுகின்றனர். அவர்களை கடித்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், அய்யர்பங்களா.