Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

ADDED : ஜூன் 16, 2024 01:10 PM


Google News

விழிப்புணர்வு பேரணி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் நர்மதாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர், நகரமைப்பு குழு தலைவர் அசோகாரெட்டி ஆகியோர், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பள்ளி முன் துவங்கிய பேரணி, ஜூஜூவாடி நகர் முழுவதும் சென்று, மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், பேரணியின் போது மாணவ, மாணவியர் மூலம், 500 க்கும் மேற்பட்ட மஞ்சப்பை மற்றும், 150 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஸ்வர்ணா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கூலித்தொழிலாளியை தாக்கியவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே இருதாளத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 50. கூலித்தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிரியப்பா, 37, என்பவரும் அருகருகே வசிக்கின்றனர். வெங்கடேசப்பா புதிய வீடு கட்டுவதற்காக, கிரியப்பா வீட்டின் வழியாக கட்டுமான பொருட்களை கொண்டு சென்றார்.

இதற்கு கிரியப்பா ஆட்சேபனை தெரிவித்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிரியப்பா, வெங்கடேசப்பாவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கடேசப்பா கொடுத்த புகார்படி, கெலமங்கலம் போலீசார், கிரியப்பாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஷெட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த, கே.எட்டிப்பட்டியை சேர்ந்தவர் பூபாலன், 50, வழக்கறிஞர். கடந்த, 12 காலை இவர் வீட்டருகே இருந்த ஷெட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், அங்கிருந்த ஏர் கம்ப்ரசர், 5 தேக்கு மரங்கள், குழாய்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இது குறித்து பூபாலன் அளித்த புகார்படி சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us