Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறையை கண்டித்து மறியல்

யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறையை கண்டித்து மறியல்

யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறையை கண்டித்து மறியல்

யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறையை கண்டித்து மறியல்

ADDED : ஜன 30, 2024 03:25 PM


Google News
கிருஷ்ணகிரி : மகாராஜகடை அருகே, யானை தாக்கி விவசாயி பலியானார். இதனால், வனத்துறையை கண்டித்து, அப்பகுதி மக்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடையை சேர்ந்தவர் சாம்பசிவம், 55; விவசாயி. இவர், நேற்று காலை, 6:00 மணிக்கு, பூவகவுண்டன் ஏரி அருகே தன் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேய இறந்தார். வனத்துறையினர் மற்றும் மகாராஜகடை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.இந்நிலையில், விவசாயி சாம்பசிவம் சடலத்துடன், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், மகாராஜகடையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., சங்கு தலைமையில், டி.எஸ்.பி., சிவலிங்கம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள், இங்கு சுற்றித்திரியும் யானைகளை விரட்ட, வனத்துறையினரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் மற்றும் போலீசார், இனி யானைகள் விவசாய நிலத்திற்கு வராமல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உறுதி அளித்ததையடுத்து, மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.ஆந்திராவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியான மகாராஜகடையை சுற்றி, 40 கிராமங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜன., முதல் கோடைக்காலம் வரை கர்நாடக, ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்தும், விவசாயிகளை தாக்குவதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us