Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்

வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்

வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்

வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்

ADDED : ஜூன் 12, 2024 06:56 AM


Google News
ஓசூர் : கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால், பயணிகள், மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தர்மபுரி மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்திற்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். பஸ்களை நிறுத்தும் பிளாட்பார பகுதியில், கார், இருசக்கர மற்றும் சரக்கு வாகனங்களை தனி நபர்கள் தினமும் நிறுத்தி விடுகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்காரர்கள், முன்பகுதியில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், நின்று செல்ல இடவசதி இல்லை. பயணிகளை ஏற்றிச்செல்ல, பஸ்கள் நிற்கும் பிளாட்பார பகுதி, வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

டவுன் பஞ்., நிர்வாகமோ அல்லது கெலமங்கலம் போலீசாரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கின்றனர். இதனால், தினமும் காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். ஒரே நேரத்தில், ஒரு சில பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தாலே நிறுத்துவதற்கு கூட இடமில்லை. எனவே, போலீசார் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகம், பஸ் ஸ்டாண்டிற்குள் கார், இருசக்கர, சரக்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, கெலமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, ''கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். போலீசாரை நியமித்து, பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கூறியுள்ளோம். நாங்களும் டவுன் பஞ்., ஊழியர்களை அனுப்பி, வாகனங்கள் நிறுத்தாமல் கட்டுப்படுத்துகிறோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us