ADDED : ஜூன் 14, 2025 06:10 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லவில்லை. விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை இரண்டு மணி நேரம் தாமதமானது.
இங்கு நேற்று முதல் ஜூன் 18- வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. சூறாவளியும் வீசுவதால் கன்னியாகுமரி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளன.
நேற்று கன்னியாகுமரி, சின்ன முட்டம், கோவளம், கீழமணக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு சென்றவர்களையும் திரும்ப அறுவுறுத்தப்பட்டுள்ளது.
குளச்சல் பகுதியான கொட்டல் பாடு, சைமன் காலனி கோடி முனை நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து செல்கின்றனர். காலை 8:00 மணிக்கு எல்லா நாட்களிலும் படகு போக்குவரத்து தொடங்கும். சூறாவளி காரணமாக நேற்று 2 மணி நேரம் தாமதமாக காலை 10:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.