Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆக்கிரமிப்பில் மீட்ட இடங்களுக்கு வேலி அமைக்க... பணமின்றி தவிப்பு!:பாதுகாப்பு இல்லாத 1,776 ஏக்கர் அரசு நிலங்கள்

ஆக்கிரமிப்பில் மீட்ட இடங்களுக்கு வேலி அமைக்க... பணமின்றி தவிப்பு!:பாதுகாப்பு இல்லாத 1,776 ஏக்கர் அரசு நிலங்கள்

ஆக்கிரமிப்பில் மீட்ட இடங்களுக்கு வேலி அமைக்க... பணமின்றி தவிப்பு!:பாதுகாப்பு இல்லாத 1,776 ஏக்கர் அரசு நிலங்கள்

ஆக்கிரமிப்பில் மீட்ட இடங்களுக்கு வேலி அமைக்க... பணமின்றி தவிப்பு!:பாதுகாப்பு இல்லாத 1,776 ஏக்கர் அரசு நிலங்கள்

ADDED : ஜூன் 07, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, 2.25 கோடி ரூபாய் மதிப்பில், 40 இடங்களில், 66.7 ஏக்கர் நிலங்களுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 1,776 ஏக்கர் அரசு நிலங்கள் ஏற்கனவே ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அரசு வழங்கிய 2.25 கோடி ரூபாய் போதவில்லை என, வருவாய் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் நீர்நிலை மற்றும் அரசு நிலங்கள் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை வருவாய் துறையினர் சிறுக, சிறுக மீட்கின்றனர். இருப்பினும், அதே நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

ரூ.50 கோடி


மேலும், நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள விலை மதிப்புமிக்க அரசு நிலங்கள் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, 2022ல், சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர், அரசு நிலங்களை மீட்டு பாதுகாக்க, சிறப்பு நிதியாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுதும், 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், நிதி பங்கீடு செய்து வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, வருவாய் துறை, மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் துறையினருக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து தாலுகாக்களில் உள்ள விலை மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாக்க, 2022-23ம் நிதியாண்டில் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 34 இடங்களில் வேலி போடப்பட்டன.

அபாய கட்டம்


இதையடுத்து, 2023- - 24ம் நிதியாண்டில், 75 லட்ச ரூபாய் மதிப்பில், ஆறு இடங்களில் வேலி போடப்பட்டது. மொத்தம், 66.7 ஏக்கர் அரசு நிலங்கள் இந்த நிதி மூலம், வேலி போடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல நுாறு ஏக்கர் அரசு நிலங்கள் விலை மதிப்புமிக்கதாக, பாதுகாப்பு இன்றி உள்ள நிலையில், வெறும் 2.25 கோடி ரூபாய் மட்டும் அரசு ஒதுக்கியதால், 40 இடங்களில் மட்டுமே வருவாய் துறையினர் வேலி போட முடிந்தது.

குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் போன்ற சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு பிடியிலும், ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய அபாய கட்டத்திலும் உள்ளன.

இந்தாண்டு அரசிடம் இருந்து நிதி வருவதற்கான வாய்ப்பில்லை என வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 663 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்களும், 1,113 ஏக்கர் பிற வகையான அரசு நிலங்கள் என, மொத்தம், 1,776 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இவற்றை மீட்டெடுக்க வேண்டிய தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர்கள் வேடிக்கை பார்ப்பதால், அரசு நிலங்கள் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுகின்றன.

அரசு வழங்கிய சிறப்பு நிதி, மிக குறைவு என்பதால், போதிய அரசு நிலங்களை பாதுகாக்க முடியாத சூழல் நிலவுவதாக வருவாய் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அறிவுறுத்தல்@

@

சிறப்பு நிதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்கினால், விலை மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாக்க முடியும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டம் பற்றி வருவாய் துறையினர் கூறியதாவது:

இத்திட்டத்தின் கீழ், அனாதீனம், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரும் உபரி நிலங்கள், நத்தம் காலியிடங்கள், நீர்நிலைகளான குளம், குட்டை, மேய்க்கால் நிலங்கள் போன்ற நிலங்களுக்கு வேலி அமைக்கலாம்.

அதேபோல, களம் புறம்போக்கு, புஞ்சை தரிசு, நஞ்சை தரிசு, மந்தைவெளி, பூமிதானம் போன்ற நிலங்களுக்கும் வேலி அமைக்கலாம்.

இதில், தோப்பு, மயானம் உள்ளிட்டவை கிராம ஊராட்சிகளால் பாதுகாக்க வேண்டும். கோவில்களின் பட்டா நிலங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றின்நிலங்கள் அந்தந்த நிறுவனங்களின் நிதியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என, துறை மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

விலை மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாக்க, அரசு தான் நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே இரு தவணையாக நிதி வழங்கப்பட்டன. அரசு எடுக்கும் முடிவை பொறுத்து. கூடுதல் நிதியை அரசு ஒதுக்கினால், வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us