Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/போலீஸ் எல்லை பிரச்னையால் தொடரும்...அலைக்கழிப்பு!:செங்கை மாவட்ட 10 கிராமங்கள் குழப்பம்

போலீஸ் எல்லை பிரச்னையால் தொடரும்...அலைக்கழிப்பு!:செங்கை மாவட்ட 10 கிராமங்கள் குழப்பம்

போலீஸ் எல்லை பிரச்னையால் தொடரும்...அலைக்கழிப்பு!:செங்கை மாவட்ட 10 கிராமங்கள் குழப்பம்

போலீஸ் எல்லை பிரச்னையால் தொடரும்...அலைக்கழிப்பு!:செங்கை மாவட்ட 10 கிராமங்கள் குழப்பம்

ADDED : பிப் 24, 2024 12:20 AM


Google News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லை பிரிப்பதில், 10 கிராமங்களுக்கு இன்று வரை சிக்கல் நீடிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர், பாதுகாப்பு கேட்கவும், புகார் அளிக்கவும் உத்திரமேரூர் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிப்பதற்கு முன், ஆறு காவல் கோட்டங்களில், 44 காவல் நிலையங்கள் செயல்பட்டன.

குழப்பம்


பின், 2019ல், செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு, காவல் நிலையங்கள், இரு மாவட்டங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டன.

வருவாய் துறைக்கான எல்லைகள் பிரிக்கப்பட்ட போதிலும், காவல் துறைக்கான எல்லைகள் சரிவர பிரிக்கப்படாததால், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், 10 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களுக்கு இன்று வரை பல்வேறு குழப்பம் நீடித்து வருகிறது.

அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 10 கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் எல்லையில், தற்போது வரை உள்ளது.

கோரிக்கை


எல்லை பிரிப்பில் கோட்டைவிட்ட அதிகாரிகளால், ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும், அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது.

தேர்தல் சமயங்களில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட 10 கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழப்பம் இன்றளவும் நீடிக்கிறது.

அதேபோல், 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புகார் அளிப்பதற்காகவும், திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்கவும் உத்திரமேரூர் செல்ல வேண்டியுள்ளது.

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள 10 கிராமங்களை, செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் இணைக்க, இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையத்தில் நிலவும் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேர்ந்த 10 கிராமங்கள்:


1. ஆலப்பாக்கம்2. எல்.எண்டத்துார்3. லாடக்கரணை4. கடம்பூர்5. நெல்லி6. சீத்தாளம்7. வைப்பணை8. கோழியாளம்9. பாப்பநல்லுார்10. பம்மையம்பட்டு



காஞ்சி தாலுகா காவல் நிலையம் பிரிவது எப்போது?


உத்திரமேரூர் காவல் நிலைய எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில், காஞ்சி தாலுகா காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, பொன்னேரிக்கரையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது. காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லையில், 75 கிராமங்களும், மாநகராட்சியில் 11 வார்டுகளும் உள்ளன. பெரிய அளவிலான எல்லையை கொண்டிருப்பதால், இரவு நேர ரோந்து உள்ளிட்டவைக்கு பெரும் சிக்கலாக இருப்பதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us