/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பதவி உயர்வு வழங்காததால் ஊராட்சி செயலர்கள் அதிருப்தி பதவி உயர்வு வழங்காததால் ஊராட்சி செயலர்கள் அதிருப்தி
பதவி உயர்வு வழங்காததால் ஊராட்சி செயலர்கள் அதிருப்தி
பதவி உயர்வு வழங்காததால் ஊராட்சி செயலர்கள் அதிருப்தி
பதவி உயர்வு வழங்காததால் ஊராட்சி செயலர்கள் அதிருப்தி
ADDED : செப் 21, 2025 10:43 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சிச் துறையின் கீழ், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டிய, 20 சதவீத பதவி உயர்வு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாதது சீனியாரிட்டி ஊராட்சி செயலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை, 2013ம் ஆண்டுக்கு முன் வரை, அந்தந்த ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்தனர்.
அதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மூலம் ஊராட்சி தோறும், ஒரு ஊராட்சிக்கு தலா, ஒரு செயலர் என, நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கண்காணித்தல், வரி வசூல் செய்தல், வரவு --- செலவு கணக்குகளை பராமரித்தல், குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் செயலர் இல்லாமல் காலி பணி இடம் உள்ளது.
அம்மாதிரியான ஊராட்சிகளில், அதன் அருகாமையிலான ஊராட்சியை ச் சேர்ந்த செயலர், காலி பணியிட ஊராட்சியையும் சேர்த்து நிர்வகிக்கும் நிலை இருந்து வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறையில் பணியிடங்களை நிரப்பும்போது, ஊராட்சி செயலர்களுக்கு 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதாவது, 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருவோருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது விதி.
இதற்கான பணி மூப்பு பட்டியல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் கணக்கெடுத்து பராமரிக்கப்படுகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் ஏராளமானோர் சீனியாரிட்டி செயலர்களாக உள்ளனர்.
எனினும், நான்கு ஆண்டுகளாக ஊராட்சி செயலர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க பொருப்பாளர் ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பணி மூப்பு பட்டியலை கொண்டு எட்டு ஊராட்சி செயலருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதன் பின் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.
இதனால், ஊராட்சி செயலருக்கு 20 சதவீதம் பதவி உயர்வு வழங்க அரசு ஆணை பிறப்பித்தும், பதவி உயர்வு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமீபத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் நேரில் வலியுறுத்தியும், மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமின்றி உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.