Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நிதி ஒதுக்கியும் பணி துவங்காத வாலாஜாபாத் கிளை நூலகம்

நிதி ஒதுக்கியும் பணி துவங்காத வாலாஜாபாத் கிளை நூலகம்

நிதி ஒதுக்கியும் பணி துவங்காத வாலாஜாபாத் கிளை நூலகம்

நிதி ஒதுக்கியும் பணி துவங்காத வாலாஜாபாத் கிளை நூலகம்

ADDED : மார் 13, 2025 10:10 PM


Google News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், பல ஆண்டுகளாக கிளை நுாலகம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நுாலகத்தில், வாலாஜாபாத் மற்றும் சுற்றி உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 4,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், தனியார் பள்ளி மற்றும் தொழிற்கல்வி மாணவ - மாணவியரும் நுாலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாணவ - மாணவியர் இந்த நூலகத்திற்கு வந்து செய்தித்தாள்கள் மற்றும் அரசு தேர்வு பாடநூல்கள், பொது அறிவு புத்தகங்கள் படித்து தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்துகின்றனர்.

இந்த நுாலகம், வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள கட்டடத்தில் கடந்த ஆண்டுகளில் இயங்கியது.

அக்கட்டடம் மிகவும் பழுதானதையடுத்து, அருகாமையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் தற்போது நுாலகம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கட்டடமும் சிதிலம் அடைந்துள்ளதோடு, போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்குகிறது. இதனால், ஆபத்தான இக்கட்டடத்தை அகற்றி, கிளை நூலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று, வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட 2023 - 24ம் ஆண்டு, மத்திய - மாநில அரசுக்கான சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், 1.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும், அதற்கான அடுத்தக் கட்டப் பணிகள் துவங்காமல் கிடப்பில் உள்ளது. எனவே, நுாலகத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நூலக ஊழியர் ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாத் கிளை நூலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

இறுதியாக அரசு சித்த மருத்துவமனை அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய நுாலக கட்டடத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கடிதமும் பெற்று வருவாய் துறையினரிடத்தில் வழங்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

விரைவாக பணி துவங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக, மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us