/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காலி பணியிடங்களால் ஊரக வளர்ச்சியில் அவதி காலி பணியிடங்களால் ஊரக வளர்ச்சியில் அவதி
காலி பணியிடங்களால் ஊரக வளர்ச்சியில் அவதி
காலி பணியிடங்களால் ஊரக வளர்ச்சியில் அவதி
காலி பணியிடங்களால் ஊரக வளர்ச்சியில் அவதி
ADDED : ஜூன் 29, 2024 10:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இதில், அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுனர்கள், இளநிலை உதவியாளர், உதவியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை பணி இடங்கள், 200க்கும் மேற்பட்டவை உள்ளன.
சாமாளிப்பு
இதில், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சில வட்டாரங்களில், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகிய பல்வேறு அந்தஸ்தில், 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதே போல, 14 ஜீப் ஓட்டுனர்கள், 18 அலுவலக உதவியாளர்கள், 8 இரவு காவலர்கள் என, 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், இளநிலை உதவியாளர், உதவியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய பணி இடங்களுக்கு, கூடுதல் பொறுப்பு அளித்து பணிகளை தொய்வு இன்றி, ஊரக வளர்ச்சி துறையினர் சாமாளித்து வருகின்றனர்.
அதேபோல, தினசரி வருகை பதிவேட்டின் அடிப்படையில், ஜீப் ஓட்டுனர்களை தற்காலிகமாக நியமித்து உள்ளனர்.
அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், டெங்கு, காலரா, மஸ்துார் ஆகிய பணி செய்யும் ஊழியர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓய்வு பெற்ற ஊழியர்கள் சிலர், இரவுக் காவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த காலி பணியிடங்களால், அலுவலகம் சார்ந்த கோப்பு பணிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என, துறை வட்டாரத்தில் புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் பொறுப்பு
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரும்பாலான பணியிடங்களுக்கு பணியாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் தொடர் மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு என, விடுப்புகளில் செல்வதால், இதுபோன்ற பணியிடங்கள் தான் காலியாக இருக்கும்.
அந்த பணிகளையும், அருகே இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுகிறது.
ஜீப் ஓட்டுனர்களுக்கு தான், அரசின் அறிவிப்பு முறையாக வெளியாகி பணிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.