Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... நிறைவேறுமா கலெக்டர் நேரில் ஆய்வு செய்ததால் நம்பிக்கை

திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... நிறைவேறுமா கலெக்டர் நேரில் ஆய்வு செய்ததால் நம்பிக்கை

திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... நிறைவேறுமா கலெக்டர் நேரில் ஆய்வு செய்ததால் நம்பிக்கை

திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... நிறைவேறுமா கலெக்டர் நேரில் ஆய்வு செய்ததால் நம்பிக்கை

ADDED : ஜூலை 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியங்களில் கலெக்டர் பிரசாந்த் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்திருப்பதுகிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு திருக்கோவிலுாரின் வளர்ச்சி திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கலெக்டர்கள் திருக்கோவிலுார் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுடன் ஆய்வு செய்ய வருவதில்லை.

இதன் காரணமாக திருக்கோவிலுார் எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பிரசாந்த் நேற்று திருக்கோவிலுார் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக 54 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு தளங்களைக் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணியினை நேரில் ஆய்வு செய்தார்.

பணியின் வளர்ச்சி, குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல் ஜி.அரியூரில் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் மாணவர் சேர்க்கை விபரம், விடுதியின் பராமரிப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு விபரங்களை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து டி.கீரனுார் கிராமத்தில் உள்ள கிராம அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்களை பயோமெட்ரிக் மிஷின் வாயிலாக ஒப்பீடு செய்து ஆய்வு செய்தார்.

கடந்த காலங்களில் திருக்கோவிலுார் நகரம் மட்டுமல்லாது, ஒன்றியங்களும் வளர்ச்சி பணிகளில் அரசியல் பின்னணி காரணமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டு வந்த நிலையில், இதுவரையிலான கலெக்டர்கள் இப்பகுதிக்கு வருவதை தவிர்த்து வந்தனர்.

புதியதாக பொறுப்பேற்றிருக்கும் கலெக்டர் பிரசாந்த் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகவே சென்று வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து, குறைகளையும் கேட்டறிந்தது இப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகவே இருந்தது.

திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதிலிருந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும் கீழையூர் தரைப்பாலத்தின் அருகே உயர் மட்ட பாலம் கட்டும் திட்டப்பணி, அரசு கலைக் கல்லுாரிக்கான சொந்த கட்டுமான பணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், உழவர் சந்தை, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு கலெக்டர் செயல் வடிவம் கொடுப்பார் என பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

ஆய்வின் போது திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் மாரியாப்பிள்ளை, நகராட்சி கமிஷனர் கீதா மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us