Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளச்சாராய ஒழிப்பில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு... தேவை; இனியும் விழிப்புணர்வு இல்லையேல் விமோசனம் இல்லை

கள்ளச்சாராய ஒழிப்பில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு... தேவை; இனியும் விழிப்புணர்வு இல்லையேல் விமோசனம் இல்லை

கள்ளச்சாராய ஒழிப்பில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு... தேவை; இனியும் விழிப்புணர்வு இல்லையேல் விமோசனம் இல்லை

கள்ளச்சாராய ஒழிப்பில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு... தேவை; இனியும் விழிப்புணர்வு இல்லையேல் விமோசனம் இல்லை

ADDED : ஜூன் 24, 2024 05:37 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராய விற்பனையை தொழிலாக செய்யும் சாராய வியாபாரிகள் மீதான காவல் துறை நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட கிராம மற்றும் நகர மக்களும் ஒருங்கிணைந்து தடுப்பு பணிகள் மேற்கொண்டால் மட்டுமே, சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க முடியும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. புகார் வரும் போது மட்டும் போலீசார், சாராய வியாபாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இவை வழக்கமாக இருந்து வருகிறது.

கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் கட்டுபடுத்தி ஒழிக்கும் வகையிலான நடவடிக்கை எடுத்தது இல்லை.

தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்ற நிலையில் 55க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பல ஆண்டுகளாக சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல சாராய வியாபாரிகளாக திகழும் கருணாபுரம் கோவிந்தராஜ், விஜயா, தாமோதரன், மாதவச்சேரி ராமர், சேஷசமுத்திரம் சின்னதுரை ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்கள் தடுப்புக் காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சில கிராமங்களில் குறிப்பிட்ட தொகையை கிராமத்தின் பொது தேவைக்கு பணத்தை கொடுத்தும், கிராமத்தில் சாராய விற்பனை செய்ய போட்டி ஏற்பட்டு ஏலம் விடப்படும் நிகழ்வுகளும் நடக்கிறது.

இதற்காக போலீசுக்கு முறையாக மாமூல் செலுத்துவது மட்டுமின்றி, லோக்கலில் சாராய விற்பனையை தடுப்போரை பணம் கொடுத்தும் சரிகட்டி விடுகின்றனர்.

மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச்சி மொத்தமாக விநியோகம் செய்யும் பெரும் கள்ளச்சாராய வியாபாரிகள் முதல் மிக்சிங் செய்து மக்களிடம் விற்பனை செய்யும் சிறு சாராய வியாபாரிகள் வரை அவ்வப்போது காவல் துறையினர் பிடித்து வழக்குப் பதிந்து செய்து கைது செய்கின்றனர்.

சில நாட்கள் கழித்து வெளியே வந்தவுடன், மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபடுகின்றனர். பல்வேறு கிராமம் மற்றும் நகர பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை பலர் தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களின் நடவடிக்கையை முற்றிலும் தடுக்க முடியாமல் போனதன் விளைவே தற்போது பலரது இறப்புக்கு காரணமாக உள்ளது.

தற்போது, கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையால் நடந்த இந்த துயர சம்பவம், வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் மற்ற கிராமங்களில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே, பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்க்கமான முடிவு எடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாராய விற்பனை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இல்லையெனில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதுதான் நிதர்சனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us