ADDED : ஜூன் 14, 2025 01:10 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் ஒரு மாத காலத்திற்கு ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 36 துணை அஞ்சலகங்களில், வரும் 16ம் தேதியில் இருந்து ஜூலை 15ம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை முகாம் நடைபெறும்.
புதிதாக ஆதார் பதிவு செய்யவும், 5 முதல் 15 வயதுடையவர்கள் பயோமெட்ரிக் புதுப்பிக்கவும் கட்டணம் கிடையாது.
குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்ய அசல் பிறப்பு சான்றிதழும், தாய் அல்லது தந்தையின் அசல் ஆவணங்களும் எடுத்து வர வேண்டும்.
செல்போன் எண், இ-மெயில் திருத்தம் செய்ய ஆவணங்கள் தேவையில்லை. மற்ற திருத்தங்களுக்கு தகுந்த அசல் ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.