Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆரம்பம் ஆனது லோக்சபா தேர்தல் 'குஸ்தி' தி.மு.க.,வை வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,

ஆரம்பம் ஆனது லோக்சபா தேர்தல் 'குஸ்தி' தி.மு.க.,வை வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,

ஆரம்பம் ஆனது லோக்சபா தேர்தல் 'குஸ்தி' தி.மு.க.,வை வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,

ஆரம்பம் ஆனது லோக்சபா தேர்தல் 'குஸ்தி' தி.மு.க.,வை வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,

ADDED : பிப் 06, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க., வை வம்புக்கு இழுக்கும் விதமாக 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் அ.தி.மு.க., சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழு என 3 குழுக்களை உருவாக்கியது.

தொடர்ந்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., - கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி விட்டனர்.

தி.மு.க., தற்போது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால் தேர்தல் பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்து சுறு, சுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல், அ.தி.மு.க.,விலும் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரச்சாரகுழு மற்றும் விளம்பர குழு என 4 குழுக்களை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெற உள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகிய நிலையில், எந்தெந்த கட்சிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்கும் என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் சூடுபிடிக்கும் விதமாக 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற தலைப்பில் அ.தி.மு.க., மீம்ஸ் தயார் செய்து கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.

அதில், என்னைத் தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள், மது விலக்கு அமல்படுத்தப்படும்னு சொன்னவரும், மதுவோட விலைய ஏத்தினவரும் ஒரே ஆளா, நீட் தேர்வை நாங்கள் வந்தால் ரத்து செய்வோம் என்று சொல்லி, இன்று நடக்கும் நீட் தற்கொலைக்கு காரணமான டில்லி கொத்தடிமை சின்னவன் என்பது உட்பட பல்வேறு தலைப்பிலான வாசகங்களுடன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியின் கார்ட்டூன்களையும் வரைந்து, அதற்கு கீழே 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற வாசகம் அடங்கிய மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., பகிர்ந்தது.

அ.தி.மு.க., வின் அதே பாணியை பின்பற்றி தி.மு.க.,வும் பதிலடி கொடுத்தது. அதாவது, பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகள், மாநில அரசின் திட்டங்களுக்கு இடையூறு செய்வது ஆளுநரின் உரிமை என பாதம் தாங்கும் அடிமை. தமிழர்களுக்கு துரோதம் செய்தது என பல்வேறு தலைப்பிலான வாசகங்களுடன் முன்னாள் முதல்வர் பழனிசாமி கார்ட்டூனை வரைந்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் தி.மு.க., பகிர்ந்தது.

இதனால் சமூக வலைதளங்களில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினருக்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர பகுதிகளில் 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற வாசகம் மட்டும் அடங்கிய போஸ்டர்கள் அ.தி.மு.க., சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க.,வை போஸ்டர் மூலம் அ.தி.மு.க., வம்புக்கு இழுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us