Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்: இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்: இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்: இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்: இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2024 06:27 AM


Google News
கள்ளக்குறிச்சி: மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இரு இடங்களிலும் மேம்பாலங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேலம்--உளுந்தூர்பேட்டை 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், இலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகியவை உள்ளிட்ட இடங்களில் புறவழிச்சாலைகள் அனைத்தும் இருவழிச்சாலைகளாக இருந்தது.

இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சாலையில் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்துார், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் புறவழிச்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க புறவழிச்சாலையுடன் இணைக்கும் பகுதி 14 இடங்களில் மொத்தம் ரூ.350 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் நீலமங்கலம், ஏமப்பேர் ஆகிய இரண்டு பகுதி சாலைகளிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படாமல் விடுபட்டு உள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சிக்கு தினமும் வரும் மாடூர், வீரசோழபுரம், தச்சூர், இந்திலி, உலகங்காத்தான், மேலுார், புக்கிரவாரி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர்.

தினமும் உயிர் பயத்துடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்கு வரும் இவர்களின் பாதுகாப்பு கருதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே கள்ளக்குறிச்சி நகரப்பகுதியை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இரு பகுதிகளிலும் மேம்பாலங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us