Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

ADDED : ஜூன் 22, 2024 05:43 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் குணமாகியுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் பிரசாந்த் சந்தித்து, அவர்களின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.

பின், அவர் கூறியதாவது:

கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை (காலை 9:30 மணி நிலவரப்படி) 193 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 53 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மீதமுள்ள 140 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை 24 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்க, மற்ற மருத்துவமனையில் இருந்து 56 சிறப்பு மருத்துவர்கள், 10 தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரின் உடல் நலம் தேறி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 30 பேர் குணமாகியுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மனநல ஆலோசனையும், எதிர்காலத்தில் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதபடி சிகிச்சை அளிக்கப்படும்.

கண் குறைபாடு ஏற்பட்ட 3 பேருக்கு, கண் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவத்தால் பாதிப்படைந்த இடங்களில், வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வும், மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 55 பேர் கண்டறியப்பட்டு, மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயிரிழந்த 53 பேரில், 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us