Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் பாதிப்பு! புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் பாதிப்பு! புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் பாதிப்பு! புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் பாதிப்பு! புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : ஜூன் 16, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் மயான வளாகத்தில் குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்து புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கள்ளக்குறிச்சி நகராட்சியில், சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக திடக்கழிவு மேலாண்மை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோமுகி ஆற்றங்கரையோரம் உள்ள நகராட்சி மின் மயான வளாகத்தில் பசுமை உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் 21 வார்டுகளிலும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து துாய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மக்கும் குப்பைகள் மூட்டையாக நகராட்சி மின் மயான வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது, மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் மின் மயானத்திற்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையே நகராட்சி மின் மயான வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவ்வப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் குப்பைகள் அகற்றப்படுவதில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென குப்பை கிடங்கு தீ பிடித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் அப்பகுதி முழுதும் எழும்பிய புகை மூட்டத்தால் கள்ளக்குறிச்சி - துருகம் சாலை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுடன் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

குப்பை கிடங்கு எரிந்ததால், மேலே சென்ற மின் ஒயர் ஒன்று அறுந்து விழுந்தது. இருப்பினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு குப்பை கிடங்களில் ஏற்பட்ட தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். நகராட்சி மின் மயான வளாகம் மற்றும் கோமுகி ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை முறையாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us