ADDED : ஜூன் 18, 2024 11:58 PM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அருவங்காடு மேற்குமலை வனப்பகுதியில், பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, பேரல்களில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
மேலும், அங்கு லாரி டியூப்களில் இருந்த 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருவங்காட்டினை சேர்ந்த சின்னதம்பி, தங்கமணி ஆகியோர் மீது கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.