Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோலாகலமாக துவங்கியது சிவன்மலை தைப்பூச தேரோட்டம்

கோலாகலமாக துவங்கியது சிவன்மலை தைப்பூச தேரோட்டம்

கோலாகலமாக துவங்கியது சிவன்மலை தைப்பூச தேரோட்டம்

கோலாகலமாக துவங்கியது சிவன்மலை தைப்பூச தேரோட்டம்

ADDED : ஜன 27, 2024 04:18 AM


Google News
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம், நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா, கடந்த, 17ம் தேதி வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி ரதத்துக்கு எழுந்தருளினார். மாலை. 4:45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்து ராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, சிவன்மலை கோவில் உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), திருப்பூர் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், த.மா.கா., விடியல் சேகர், காங்கேயம் யூனியன் சேர்மன் மகேஷ்குமார், துணை சேர்மன் ஜீவிதா ஜவஹர், சின்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், கிரிவல பாதையில் அசைந்தாடியபடி திருத்தேர் சென்றது. 200 மீட்டர் துாரம் இழுக்கப்பட்டு, 5:20 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து நிலை சேரும்.

தேரோட்டத்தில் திருப்பூர், காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும், பாத யாத்திரையாகவும் வந்தனர். திருவிழாவையொட்டி காங்கேயத்தில் இருந்து, 18 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், 275 போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us