வனப்பகுதி கோவிலில் பொங்கல் திருவிழா
வனப்பகுதி கோவிலில் பொங்கல் திருவிழா
வனப்பகுதி கோவிலில் பொங்கல் திருவிழா
ADDED : பிப் 24, 2024 03:55 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹடா வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமி தினத்தில் பொங்கல் விழா நடப்பது வழக்கம். உப்பிலிய நாயக்கர்களின் குல தெய்வமான இக்கோவில் விழாவில், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வர். பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
நடப்பாண்டு விழா நேற்று தொடங்கியது. நாளை வரை நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்தபடியே உள்ளனர். அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோவில் இருப்பதால், உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி நாள் ஒன்றுக்கு, நுாறு வாகனங்கள் மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில், மூன்று நாட்களுக்கு, 300 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் வனத்துறையினர் தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்களை அனுமதிக்கின்றனர். நேற்று மட்டும்,
300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. ஆனால், நுாறு மட்டுமே அனுமதிக்கப்படன.
இதனால், 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பக்தர்கள், 2,௦௦௦க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு செல்ல முடியாமல் சோதனைச்சாவடி பகுதியில் காத்திருந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவால் நடப்பாண்டு அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு இதில் தலையிட்டு விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்குமாறு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.