Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

ADDED : ஜூன் 01, 2024 06:41 AM


Google News
கணவருடன் நடந்து சென்ற மனைவி தேள் கடித்து சாவு

புன்செய்புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டி நகராட்சி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 35; சீமார் புல் கட்டும் தொழிலாளி. இவரின் மனைவி கவிதா, 28; கடந்த, 29ம் தேதி இரவு டானாபுதுார் டீக்கடையில் டீ குடித்துவிட்டு இருவரும் வீட்டுக்கு நடந்து சென்றனர்.அப்போது கொடிய விஷம் கொண்ட கருந்தேள் கவிதாவை கடித்துள்ளது. வலியால் அலறித்துடித்த மனைவியை, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கவிதா நேற்று இறந்தார். உயிரிழந்த கவிதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட அளவில் குட்கா சோதனை; 14 பேர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று, மாவட்ட அளவில் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்று, போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஈரோடு பெரியவலசு வள்ளியம்மை வீதி வெள்ளியங்கிரி,62, முள்ளாம்பரப்பு ராஜபெருமாள்,43, ரங்கம்பாளையம் ரயில் நகர் தர்மராஜ்,25, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் கருப்பையா,48, திருப்பதி,44, கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லே-அவுட் ராஜா, பவானி மெயின் ரோடு தாண்டவன் மனைவி சின்னபொன்னு,53, பவானி தேவராஜன் சந்து தேன்மொழி, 48, உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ஏராளமான குட்கா உட்பட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், அக்ரஹாரம் பகுதி பவானி ஆற்றில், நேற்று முன்தினம் ஆண் சடலம் மிதந்து வந்துள்ளது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற சத்தி போலீசார், உடலை கைப்பற்றி சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து போனவருக்கு, 50 வயதிருக்கும். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரிக்கின்றனர்.

கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா அழைப்பு

ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: வரும், 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101வது பிறந்த நாளை முன்னிட்டு, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில், நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓட்டு எண்ணும் பணி சூப்பர்வைசர் நியமனம்

ஈரோடு : ஈரோடு அடுத்த சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் வரும், 4 காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகிறது. இதில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் பணிக்கு மேற்பார்வையாளராக ராஜீவ் ரஞ்சன் மீனா; மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் தொகுதிகளுக்கு மேற்பார்வையாளராக காயத்ரி என்.நாயக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சப்பை இயந்திரம் பொருத்தம்

ஈரோடு : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளின் உபயோகத்தை தடுக்கும் வகையில், பஸ் ஸ்டாண்ட், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன்படி ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், தனியார் அமைப்பு சார்பில் மஞ்சப்பை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 10 ரூபாய் நோட்டு, அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us