Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காந்தி மார்க்கெட் கட்டட பணியால் போக்குவரத்து நெரிசல் பழநி 18 வது வார்டு மக்கள் அவதி

காந்தி மார்க்கெட் கட்டட பணியால் போக்குவரத்து நெரிசல் பழநி 18 வது வார்டு மக்கள் அவதி

காந்தி மார்க்கெட் கட்டட பணியால் போக்குவரத்து நெரிசல் பழநி 18 வது வார்டு மக்கள் அவதி

காந்தி மார்க்கெட் கட்டட பணியால் போக்குவரத்து நெரிசல் பழநி 18 வது வார்டு மக்கள் அவதி

ADDED : ஜூன் 06, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
பழநி: பழநி காந்தி மார்க்கெட் கட்டட பணியால் நகராட்சி 18 வது வார்டு புது கச்சேரி தெரு மக்கள் அவதிப்படுகின்றனர்.

புது கச்சேரி தெரு, ராஜேந்திர ரோடு, நேரு தெரு, ஆர்.எப்.ரோடு ஒரு பகுதி, ஆர்.எம்.கே தோட்டத்தை உள்ளடக்கிய இந்த வார்டு நகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பல பகுதிகளில் நிறுவனங்கள். குடியிருப்புகள் அடங்கி உள்ளன. மார்க்கெட் கட்டடங்கள் கட்டப்படாததால் இந்த வார்டின் குடியிருப்பு பகுதியான புது கச்சேரி வீதி போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது.

நாய் தொல்லை அதிகம்


பீட்டர், ஓய்வு போக்குவரத்து ஊழியர், ஆர்.எம்.கே.தோட்டம் : ஆர்.எம்.கே. தோட்டம், ஆர்.எப்.ரோடு பகுதிகளில் சாலைகளில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகள் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நாய் தொல்லை அதிகளவில் உள்ளது.

மின்விளக்கின்றி அசுத்தம்


ராஜேஷ் குமார், வியாபாரி, ஆர்.எம்.கே தோட்டம் : சாக்கடைகள் சேதமடைந்துள்ளன. இதனால் குழாய்கள் போட்டு தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். புது கச்சேரி தெருவில் இரவில் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு வசிப்பவர்கள் அவதிப்படுகின்றனர்.

குறுக்கிடும் வார்டுகள்


சுந்தர், காங்., பொறுப்பாளர், பழநி :ஆர்.எம்.கே தோட்டம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள புது கச்சேரி வீதி 18 வது வார்டில் உள்ளது. இதற்கு இடையே இரண்டு வார்டுகள் உள்ளன. இதனால் ஓட்டளிக்கும் போது ஓட்டுச்சாவடிக்கு ஆர்.எம்.கே.தோட்டத்திலிருந்து வெகுதுாரம் சென்று ராஜாஜி ரோடு பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓட்டுச்சாவடியை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்


முருகானந்தம், கவுன்சிலர் (அ.தி.மு.க.) : ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரியாக எரிகிறது. நாய் தொல்லை பொதுவாக அனைத்து இடங்களிலும் உள்ளன. ரோடுகளில் திரியும் விலங்குகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். காந்தி மார்க்கெட் கட்டடத்தை விரைந்து முடிக்கும் நிலையில் கச்சேரி வீதியில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பணி நடந்து வருகிறது. ஆர்.எம்.கே தோட்டம் பகுதி மக்கள் தேர்தலின் போது ஓட்டளிக்க வெகு துாரம் செல்ல வேண்டி உள்ளது. சட்டசபை தேர்தல் போது அருகில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்கலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us