Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்

தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்

தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்

தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்

ADDED : ஜன 07, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 8வது வார்டில் பாதாள சாக்கடையை முறைப்படி இணைக்காமல் போனதால் தெருக்களில் கழிவுநீர் கரைபுரண்டோட இந்த பகுதி மக்கள் நித்தம் நித்தம் தவியாய் தவிக்கின்றனர்.

சுபேதார் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து, ராமசாமிபுரம், அஜித்சாயபு சந்து, நாட்டாமைக்கார சந்து, நாயக்கர்புதுார் மூன்று தெருக்கள், மூக்கன் ஆசாரி தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் காளிமுத்து பிள்ளை சந்து, ராஜிவ் காந்தி தெரு, மூக்கன் ஆசாரி சந்து பகுதி சாக்கடைகள் துார்வாரப்படாமல் உள்ளதால் கழிவு நீர் தேங்கி நோய்தொற்று அபாயம் உள்ளது.

வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் ரோடுகள் போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.

குறிப்பாக நாயக்கர் புதுதெரு மண் ரோட்டில் செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி செலவு வைப்பதால் பலர் இவ்வழியை பயன்படுத்துவதையே தவிர்க்கும் நிலை உள்ளது. மூக்கன் ஆசாரி சந்தில் பாதாள சாக்கடை திட்ட இணைப்பை முறைப்படி முழுமையாக இணைக்காமல் சாதாரண ஓடையில் சங்கமிக்க செய்ததால் செல்ல வழியின்றி மேன்ஹோல்களில் இருந்து பீறிட்டு ஓடுகிறது.

பழநி ரோட்டிலுள்ள பாதாள சாக்கடை திட்டத்துடன் முறைப்படியாக கழிவுநீர் பாதையை இணைக்காமல் உள்ளதால் தெருமுழுவதும் சாக்கடை வெள்ளம் கரை புரண்டோடுகிறது. நாயக்கர் புது தெரு நுாற்றாண்டு பள்ளி அருகில் உள்ள புதிய கட்டட ரேஷன் கடை பல மாதங்களாக திறக்கப்படாமல் அலங்கார பொருளாய் காட்சியளிக்கிறது.

அஜித் சாயபு சந்து, நாயக்கர் புது சந்தில் போதிய மின்விளக்கு வசதியில்லாமல் இருளாக உள்ளது. ஒரே பொழுதுபோக்கு மையமான கோபாலசமுத்திரம் நடைபயிற்சி பூங்கா செல்லும் பாதையில் கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது.

சாக்கடை வசதியற்ற சூழல்


லீலாவதி, குடும்ப தலைவி: வரப்பு உயர நீர் உயரும் என்பது போல் கழிவு நீர் தேக்கம் அதிகரித்தல் என்பது அனைத்து நோய்களுக்குமான மூலதனமாகும். அதன்படியாக பாதாள சாக்கடை பணி கட்டுமான குளறுபடியால் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் தேக்கமானது நிரந்தரமாகி வருகிறது. வரிகள் முழுமையாக செலுத்தியும் சாக்கடை வசதியற்ற சூழலில் நாங்கள் வாழ்வது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது.

வாசலில் கரைபுரளும் கழிவுநீர்


பாக்கியலெட்சுமி, குடும்ப தலைவி: வீட்டிற்குள் நுழையும்போதே கழிவு நீரை மிதித்து கொண்டுதான் வர முடியும் என்ற சூழலில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் எங்கள் பகுதியினர்களுக்கு நோய்தொற்று அதிகரித்துள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் வீட்டு வாசலில் ஓடுவது என்பது எத்தனை ஆபத்தான போக்கு என்பதை உணராமல் அலட்சிய படுத்தி வருகின்றனர். கழிவுநீர் பிரச்னையே எங்கள் பகுதியினர்களின் பிரதான பிரச்னையாக உள்ளது. உடனடியாக தீர்க்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

தெருநாய்கள் தொல்லை


சுகுமாரி, குடும்ப தலைவி: தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கழிவு நீர் பிரச்னையில் அல்லாடும் எங்கள் பகுதியானது தெருநாய்களின் ஆதிக்கத்திலும் உள்ளதால் குடியிருப்பாளர்களின் வாழ்வில் சிரமம் மிகவும் அதிகரித்துள்ளது. வாகனத்தில் சிறிது கவனம் சிதறினாலும் தெருநாய்களின் குறுக்கீட்டால் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக் கடைகளை துார்வாருங்க


பாண்டுரங்கன், குடும்பத் தலைவர்: சாக்கடைகளில் மண் அள்ளப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. பொறுப்பற்ற முறையில் அப்படியே விட்டு சென்றால் கழிவு நீர் தேக்கமானது அதிகரித்து தெருக்களில்தான் ஓடும். மாநகராட்சியின் முதல்கட்ட நடவடிக்கையாக சாக்கடைகளை துார்வாரி கழிவுநீர் வெளியேற பாதை அமைத்து தர வேண்டும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்தொற்றுக்கு ஆளாகி மிகுந்த சிரமப்படுகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்


ஆனந்த், கவுன்சிலர், (தி.மு.க.,): சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகள் துவங்கும். நாயக்கர் புது தெரு நுாற்றாண்டு பள்ளி அருகில் உள்ள புதிய கட்டட ரேசன் கடையானது விரைவில் துவங்கப்பட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தெருவிளக்குகள் போதிய அளவில் இல்லாத பகுதியை ஆய்வு செய்து கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். 8வது வார்டு பகுதிகளின் குறைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us