/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2025 06:22 AM

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரை சேர்ந்த அமர்தீன், 30, ஜே.புதுக்கோட்டையை சேர்ந்த சரவணகுமார், 31, ஆகியோர் நான்கு ஆண்டுகளாக தேவதானப்பட்டி அருகே சீட்டு விளையாடி வந்துள்ளனர். இதில், அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவா, 47, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சீட்டு விளையாட்டில் சிவாவிடம், அமர்தீன் 90,000 ரூபாய், சரவணக்குமார் 14 லட்சம் ரூபாய் இழந்துள்ளனர். ஆட்டத்தில் முறைகேடு செய்து சிவா தங்களை தோற்கடித்ததாக அமர்தீன், சரவணகுமாருக்கு தெரிய வந்தது. இதனால் சிவாவிடம் பணத்தை கேட்டபோது, அவர் தர மறுத்தார்.
மே 11ல் பட்டிவீரன்பட்டி டாஸ்மாக் கடை அருகே டூ வீலரில் வந்த சிவாவை, அமர்தீன், சரவணகுமார், கரூர் ரத்தினபுரிநகரை சேர்ந்த உதயகுமார், 35, திண்டுக்கல்லை சேர்ந்த ஷாலிக் அபுராஜா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தினர்.
திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் ஆட்டு கொட்டகையில் சிவாவை கட்டி வைத்து, நிர்வாணமாக்கி அடித்து மொபைல்போனில் வீடியோ எடுத்தனர். அவரிடமிருந்த 40,000 ரூபாய் மற்றும் கூகுள் பே, ஏ.டி.எம்., கார்டு, வங்கி காசோலை வாயிலாக, 2.82 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர்.
சிவா புகாரில், அமர்தீன், சரவணகுமார், உதயகுமார் ஆகியோரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர். ஷாலிக் அபுராஜாவை தேடி வருகின்றனர்.