Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்

சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்

சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்

சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 16, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: சேதமான தண்ணீர் தொட்டிகள்,தெருக்களில் இல்லாத ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகள், கடித்து குதறும் கொசுக்கள்,வாகன ஓட்டிகளை துரத்தும் தெரு நாய்கள், பயன்பாடில்லாத சுரங்கபாதை,தேவைப்படும் தண்ணீர் தொட்டி,புகாரளித்தாலும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு மக்கள்.

அண்ணாநகர்,விவேகானந்தாநகர்,திருச்சி ரோடு,வ.உ.சி.நகர்,ஆர்த்தி தியேட்டர் ரோடு,சுப்ரீம் நகர்,டெலிபோன் காலனி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள சேதமான ரோடுகளில் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். டூவீலர்களிலும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் வேறு பாதையை மாற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் தொட்டிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பதால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. பகல் நேரத்திலும் கடிக்கும் கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிதவிக்கின்றனர். கொசு மருத்து அடிக்க வரும் ஊழியர்களோ ஒரு சில இடங்களில் கடமைக்கு அடித்து செல்கின்றனர்.இதனால் கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடரும் இப்பிரச்னையால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தின் அருகில் சுரங்கபாதை ஒன்று உள்ளது. இப்பாதையில் எந்நேரமும் தண்ணீர் தேங்கியே இருப்பதால் மக்கள் அந்த பாதையை மறந்தே விட்டனர். இதை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். ரோடுகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது.

இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. திருச்சி ரோடு மேம்பாலத்தில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் இரவில் வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. மக்கள் பிரச்னைகள் மீது அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள் தொல்லை


கிருஷ்ணன்,தனியார் ஊழியர்,வ.உ.சி.,நகர்: அண்ணாநகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒருசில நாய்களை பிடித்து விட்டு அதையும் மீண்டும் அதே இடத்தில் விட்டு செல்கின்றனர். இதனால் எந்த பலனும் இல்லை. தொடரும் இப்பிரச்னையை தடுக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

ரோடுகளை சீரமையுங்க


பாலகிருஷ்ணன்,ஜி.டி,என்.ரோடு: எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாதக்கணக்கில் கழிவுநீர் அப்படியே உள்ளது. வார்டில் உள்ள ரோடுகள் சேதமாகி குண்டும் குழியுமாக கிடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

தெரு விளக்குகள் இல்லை


அமல்,தனியார் ஊழியர்,திருச்சிரோடு: திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் மேல் பகுதி,அடி பகுதிகளிலும் தெரு விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இரவில் இருள் சூழ்ந்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தும் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பல பகுதிகளில் மண் தரைகளாக தான் இருக்கிறது. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிகாரிகள் தெருவிளக்குகளை முறைப்படுத்த வேண்டும்.

கவனம் செலுத்தலாமே


தனபாலன், கவுன்சிலர், (பா.ஜ.,): அண்ணாநகரில் உள்ள தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக சேதமாகி அப்படியே உள்ளது. நானும் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகாரளித்து விட்டேன். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதன்மீது கவனம் செலுத்தவும் அவர்களுக்கு நேரமில்லை. டெலிபோன் காலனியில் மழைநீர் வடிகால்கள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால் கழிவுநீர்,மழைநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் வடிகால்கள் முழுவதும் எலிகள் தொல்லைகள் அதிகரித்துள்ளது. சாக்கடைகளை துார்வாராமல் இருப்பதால் எல்லா பகுதிகளிலும் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலமும் நீடிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் என் வார்டு மீது கவனம் செலுத்துவதில்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us