Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கு கோவில் நிலத்தில் பூமிபூஜைக்கு எதிர்ப்பு

நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கு கோவில் நிலத்தில் பூமிபூஜைக்கு எதிர்ப்பு

நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கு கோவில் நிலத்தில் பூமிபூஜைக்கு எதிர்ப்பு

நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கு கோவில் நிலத்தில் பூமிபூஜைக்கு எதிர்ப்பு

ADDED : பிப் 25, 2024 03:52 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டையில் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தர்மபுரி - பென்னாகரம் சாலையில், சொந்தமாக, 4.19 ஏக்கர் நிலம் உள்ளது. இது, ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கோவில் நிலத்தில் நேற்று, பூமி பூஜை நடந்தது. அப்போது, செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து, குமாரசாமிபேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கூறுகையில், ''கோவில் நிலத்தை, தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் அபகரிக்க துடிக்கின்றனர். ஏற்கனவே, நகராட்சி குப்பை கொட்ட குத்தகைக்கு விட்டதில், 2.70 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை கொடுக்காமல் உள்ளனர்,'' என்றார்.

ஹிந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் முருகன் கூறுகையில், ''தர்மபுரி நகராட்சி சார்பில், பாதாள சாக்கடை அமைக்க, கோவில் நிலத்தில் பூமி பூஜை நடந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால், நகராட்சி சார்பில், எந்த ஒரு தகவலும் எங்களுக்கு அளிக்கவில்லை,'' என்றார்.

இது குறித்து, தர்மபுரி நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது, அவர், ''தர்மபுரியில் பாதாள சாக்கடை திட்டம், 64.58 கோடி ரூபாய் மதிப்பிலும், 11.70 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நேற்று பென்னாகரம் சாலையில் நடந்தது. அப்போது, சாலையோரம் இடம் இல்லாததால், கோவில் நிலத்தில் பூஜை போட்டோம். மற்றபடி, கோவில் நிலத்தில் திட்டம் செயல்படுத்தவில்லை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us