/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75,000 கன அடியாக உயர்வு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75,000 கன அடியாக உயர்வு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75,000 கன அடியாக உயர்வு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75,000 கன அடியாக உயர்வு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75,000 கன அடியாக உயர்வு
ADDED : ஜூலை 30, 2024 11:16 PM
ஒகேனக்கல்:கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு, 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 75,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன், கர்நாடக அணைகளில் இருந்து, 80,326 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று கபினியில் இருந்து வினாடிக்கு, 80,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 1.20 லட்சம் கன அடி என, மொத்தம், 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு, 75,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து, 15 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று, 2 லட்சம் கன அடி வரும் என்பதால், மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பாக இருக்கும் படி, கூத்தப்பாடி பஞ்., நிர்வாகம் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருவாய் துறை, போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்புத் துறையினர் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.