Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கஸ்டம்ஸ் சாலையில் 2ம் கட்டப்பணி துவங்குவது... எப்போது: முதல்வர் நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

கஸ்டம்ஸ் சாலையில் 2ம் கட்டப்பணி துவங்குவது... எப்போது: முதல்வர் நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

கஸ்டம்ஸ் சாலையில் 2ம் கட்டப்பணி துவங்குவது... எப்போது: முதல்வர் நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

கஸ்டம்ஸ் சாலையில் 2ம் கட்டப்பணி துவங்குவது... எப்போது: முதல்வர் நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

ADDED : செப் 05, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து கண்டரக்கோட்டை பாலம் வரை செல்லக்கூடியபழைய கஸ்டம்ஸ் சாலை பணியை துவங்க முதல்வர் நிதி ஒதுக்கியும் பணிகள் கிடப்பில் உள்ளது. கடலுாரில் இருந்து மாளிகைமேடு வழியாக விழுப்புரம் செல்ல பயண துாரம் 50 கி.மீ., ஆக உள்ளது. இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மிகுதி, அதிக பஸ் நிறுத்தம் காரணமாக இந்த துாரத்தை கடக்க சராசரியாக 1:30 மணி நேரம் ஆகிறது.

வழியில் உள்ள நெல்லிக் குப்பம், பட்டாம்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்படுகிறது.

இதனால் பயண நேரத்தை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், 10 கி.மீட்டர் குறைவாக புதிதாக பழைய கஸ்டம்ஸ் சாலை அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊராட்சி நிதியின் மூலம் அந்தந்த எல்லைப்பகுதியில் உள்ள சாலை செப்பணிடப்பட்டது.

கஸ்டம்ஸ் சாலை கடலுார் ஆல்பேட்டை தென் பெண்ணையாற்று கரையில் இருந்து துவங்கி பண்ருட்டி வி.கே.டி., சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் அருகே இணையும் வகையில் திட்டமிடப்பட்டது.

அதன் முதற்கட்டமாக குண்டுசாலையில் இருந்து சொர்ணாவூர் பாலம் வரை 16 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

விழுப்புரம் சாலையில் இணைக்காமல் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் விழுப்புரம் செல்லும் பயணிகளுக்கு பயன்படாமல் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கஸ்டம் சாலை மிகவும் சீர்கேடு அடைந்து விட்டது.

சாலை முழுவதும் பயன்படுத்தாமல் இருப்பதால் சாலையில் குப்பைகள், கோழி கழிவுகள், கொட்டப்பட்டு வருகிறது.

அண்மையில் இந்த கஸ்டம்ஸ் சாலையை பார்வையிட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குப்பைகளை கொட்டக்கூடாது என எச்சரித்தார்.

இந்நிலையில் கஸ்டம்ஸ் சாலையை முழுமையாக சீரமைக்கவும், 2ம் கட்ட பணியை தொடரவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்கட்டப்பணியில் நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் இல்லாததால் உடனடியாக திட்டம் நிறைவேற்றப்பட்டது.

எனவே 2ம் கட்டப்பணியில் நில ஆர்ஜிதம் செய்து மாவட்ட நிர்வாகம் உடனே சாலைப் பணியை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us