ADDED : ஜன 07, 2024 05:29 AM

திட்டக்குடி; திட்டக்குடியில், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திட்டக்குடி நகராட்சி, வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்தவர் உமா, 47: கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் கம்பெனியில் டெய்லரிங் வேலைபார்த்து வந்தார்.
கடந்த டிச., 25ம் தேதி, தலைவலி ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு, ஜன., 4ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து உமாவின் குடும்பத்தினர் அவர் உடல் உறுப்புகளை தானம் அளித்தனர்.
அதையடுத்து, திட்டக்குடி வதிஷ்டபுரத்தில், உமா உடலுக்கு, அரசு சார்பில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,சையத் மெஹ்மூத், கடலுார் ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், திட்டக்குடி டி.எஸ்.பி., சவுமியா மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.