/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 02:57 AM

சிதம்பரம் அருகே பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையோரம், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் மூட்டை மூட்டையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூட்டைகளை கைப்பற்றினர்.
அதில் பள்ளி, கல்லுாரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களின் சான்றிதழ்கள் இருந்தன. அவற்றை ஆராய்ந்ததில் அனைத்தும் போலி சான்றிதழ்கள் என தெரிந்தது.
விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர்,37; மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோர், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து முடித்தது போல், பலருக்கு போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
சங்கர், நாகப்பன் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இருவரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி பெயரில் பட்டமளிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை அடையாள அட்டைகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்து, லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
இதுகுறித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கொடுத்த புகாரின்படி, கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சங்கர், நாகப்பன் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், லேப்டாப், மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட, முக்கிய குற்றவாளிகள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். போலி சான்றிதழ் விற்பனையில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சங்கர் என்பவர், நீண்ட ஆண்டுகளாக புதுச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வீட்டையும் போலீசார் சோதனைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர், போலி சான்றிதழ் சம்பவத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து, கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் வெங்கடேச தீட்சிதர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், 'போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சங்கர், நடராஜர் கோவிலில் பணி புரியவில்லை. கோவிலில் எவ்வித பூஜை முறையோ மற்றும் நிர்வாக ரீதியான செயல்களிலோ அவர் ஈடுபடுவதில்லை. திருமணம் ஆகாதவர், அவரது தந்தையுடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். அவருக்கும் கோவிலுக்கும் சம்பந்தமில்லை' என, தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் குழு -