ADDED : ஜூன் 06, 2024 02:56 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெய்த கனமழையால் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விருத்தாசலம் பகுதியில் காலை 7:00 மணி முதல் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். அவ்வப்போது லேசாக பெய்யும் மழையும் போதிய அளவு இல்லாமல், உஷ்ணத்தை அதிகரித்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 6:45 மணி முதல், இரவு 8:00 மணி வரையிலும் அடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறியது. மேலும், கழிவுநீர் வடிகாலில் கலந்து ஆங்காங்கே தேங்கியதால் சாலைகளே தெரியவில்லை.
இதனால் மழை சற்று ஓய்ந்தும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறினர். இருப்பினும் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெண்ணாடம்
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மாலை 5:00 மணி முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 6:00 மணியளவில் லேசான துாரல் பெய்தது.
தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. 8:15 மணி வரை மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி ஏற்பட்டதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.